கையை மீறி செல்லும் இலங்கை நிலை! ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யும் அமைச்சர்கள்! அடுத்து என்ன நடக்கும்?
கொழும்பு: இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க முக்கிய நடவடிக்கையை எடுக்க உள்ளார்.
நமது அண்டை நாடான இலங்கையில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது அங்கு அரசியல் குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஏற்கனவே, மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி மகிந்தா ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ரணில் விக்ரமசிங்க ஆட்சியிலும் நிலைமை மேம்படத்தாக தெரியவில்லை.

இலங்கை
இதையடுத்து கடந்த சில நாட்களாகப் போராட்டம் மீண்டும் தீவிரமானது. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இலங்கை மக்கள் போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பினார். இப்போது வரை அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மின்வெட்டு
நாட்டில் மக்கள் பல மணி நேரம் மின்வெட்டால் எதிர்கொண்டு வரும் நிலையில், அதிபர் மாளிகையில் தாங்கள் புகுந்த போது பல ஏசிக்கள் யாருமே இல்லாத சூழலிலும் ஓடிக் கொண்டு இருந்ததாகப் போராட்டக்காரர்கள் சாடிவருகின்றனர். இந்தச் சூழலில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சரவை ராஜினாமா
கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியில் இருந்து விலக ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அனைத்து கட்சிகளைக் கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து உள்ளது. இதற்கிடையே அனைத்து கட்சிகளை உள்ளடக்கி ஆட்சியை அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் அலுவலகம்
இதற்கிடையே இது குறித்து இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அனைத்து கட்சிகளைக் கொண்ட அரசை அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அந்த அரசிடம் தமது பொறுப்புகளை ஒப்படைக்க அவர்கள் தயாராக உள்ளனர்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கை நிலை
கடந்த ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. இருப்பினும், இந்த ஆண்டு நிலைமை மெல்லக் கையை மீறிச் செல்ல தொடங்கியது. எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்குக் கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாகவே மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications