பிரபாகரன் உயிருடன் இல்லை: பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு இலங்கை ராணுவம் திட்டவட்ட மறுப்பு
பிரபாகரன் உயிருடன் இல்லவே இல்லை என்கிறது இலங்கை ராணுவம்.
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை; அவர் மரணம் அடைந்துவிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அவரது அனுமதியுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று அறிவித்திருந்தார்.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு. ஆனால் இலங்கை ராணுவம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் கூறுகையில், பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டுவிட்டார்; அதற்கான ஆதாரங்கள் உள்ளன. பிரபாகரன் கொல்லப்பட்டதை டிஎன்ஏ ஆதாரங்கள் மூலம் உறுதி செய்தோம். 2009ம் ஆண்டு மே 18-ந் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லப்படுவது தவறான தகவல்கள். இதில் சந்தேகமே இல்லை என்றார்.
முன்னதாக தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications