அய்யா பிரதமர் மோடி அவர்களே! என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்க! ராஜபக்சே ஆதரவு எம்.பி கதறல்
கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான விமலவீர திசநாயக்க தம்மை இந்தியாவுக்கு பாதுகாப்பு அழைத்துச் செல்ல வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்ததால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவருக்கு பதில் இடைக்கால புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மே9-ந் தேதி புரட்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சே ஏவிவிட்ட குண்டர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தினர். இதனால் கொதித்தெழுந்த மக்கள், நாடு முழுவதும் மகிந்த ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள், அரசியல்வாதிகள் வீடுகள் வர்த்தக நிறுவனங்களை தீ வைத்து எரித்தனர். மகிந்த ராஜபக்சேவின் வீடுகள், பெற்றோரின் கல்லறைகளும் தகர்க்கப்பட்டன.
இதனால் கொழும்பைவிட்டு தப்பி ஓடி திருகோணமலையில் இலங்கை கடற்படையினரிடம் மகிந்த ராஜபக்சே தஞ்சமடைந்தார். அதேநேரத்தில் இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவுகளில் உள்ள இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு விடுதியில் பதுங்கி இருந்தார் மகிந்த ராஜபக்சே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது கொழும்புவுக்கு மீண்டும் மகிந்த ராஜபக்சே திரும்பி இருக்கிறார். அதேநேரத்தில் பொதுமக்கள் தங்களை தாக்கிவிடுவார்கள் என்பதற்காக ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மாறுவேடத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றனர். தற்போது ராஜபக்சே ஆதரவு எம்.பி. ஒருவரின் கதறலான உருக்கமான வேண்டுகோள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க, இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், இலங்கை எம்.பிக்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையில் வழங்கப்படவில்லை; ஆகையால் என்னையும் என்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என உருக்கமாக கேட்டுள்ளார் விமலவீர.












Click it and Unblock the Notifications