தென்னை மரத்தின் மீது பிரஸ்மீட்.. சரசரவெனெ ஏறி விட்டு இறங்கத் தெரியாமல் திணறிய அமைச்சர்!
தென்னை மரங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தென்னை மரம் ஏறினார் இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ.
கொழும்பு: தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ.
இலங்கையின் பிரதான விவசாயத்தில் தென்னைக்கு மிக முக்கிய இடமுண்டு. ஆனால் தற்போது இலங்கையில் தென்னை விளைச்சல் குறைந்திருப்பதால் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தார் இலங்கையின் தேங்காய், கிதுல், பாமிரா மற்றும் ரப்பர் சாகுபடி மற்றும் அதன் தொழில்துறை தயாரிப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் ஆகியவற்றின் மாநில அமைச்சராக இருக்கும் அருந்திகா பெர்னாண்டோ. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி மிகவும் வித்தியாசமானது.

மரத்தில் பிரஸ்மீட்
டன்கோடுவாவில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு பத்திரிகையாளர்களை அழைத்து சென்றார் பெர்னாண்டோ. அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி அமர்ந்தபடி அவர் பத்திரிகையாளர்களுடன் உரையாற்றினார். அப்போது தென்னையின் தேவை பற்றி அவர் பேசினார்.

தேங்காய் பற்றாக்குறை
"உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு மற்றும் உள்நாட்டு நுகர்வுக்கு தேவையான 70 கோடி தேங்காய்கள் நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது. தென்னை மரங்களை வளர்ப்பதற்கு கிடைக்கக் கூடிய ஒவ்வொரு நில பகுதியையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேங்காய் தொழிற்சாலையை ஊக்கப்படுத்த வேண்டும்.

அரசு யோசனை
இதனால் நாட்டின் அந்நிய செலாவணி உயரும். தேங்காய் விலை விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில், நாட்டில் தேங்காய் பற்றாக்குறையை முன்னிட்டு அதன் விலையை குறைக்க அரசு யோசித்து வருகிறது" என மரத்தில் இருந்தபடியே அருந்திகா பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தேவையா?
பின்னர் அவர் மரத்தில் இருந்து இறங்க முயன்றார். ஏறும் போது எளிதாக ஏறிவிட்ட அருந்திகாவால, இறங்கும் போது அத்தனை எளிதாக இறங்க முடியவில்லை. அவரை மரத்தில் இருந்து கீழே இறக்குவதற்குள், அவரது உதவியாளர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் தேவையா என பத்திரிகையாளர்கள் கிண்டல் செய்தபடியே அங்கிருந்து கிளம்பினர்.












Click it and Unblock the Notifications