குவிக்கப்படும் சீன ராணுவம்! இலங்கை எல்லையில் என்ன நடக்கிறது? நிலைமையை விளக்கிய டக்ளஸ் தேவானந்தா
கொழும்பு: இலங்கையில் சீன ராணுவத்தின் செல்வாக்கு உள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து டக்ளாஸ் தேவானந்தா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே குழப்பமான சூழலே நிலவி வந்தது. அந்நாடு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது
அந்நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியது. கடந்த 2021ஆம் ஆண்டிலேயே நிலைமை மோசமாகும் எனப் பலரும் கணித்தனர்.

இலங்கை
இருப்பினும்., எப்படியோ பல்வேறு நடவடிக்கை எடுத்து அவர்கள் நிலைமையைச் சமாளித்துவிட்டனர். கெமிக்கல் உரங்கள், உள்நாட்டுப் போர் செலவுகள், அதிக கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு அங்கு மின்சாரம், மருந்துகள், எரிபொருளுக்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ராஜினாமா
தொழில்துறை முற்றிலுமாக முடங்கியதால், அந்நாட்டு மக்கள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதலே ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் கையை மீறிச் செல்லும் நிலை உருவான நிலையில், இலங்கை பிரதமர் மற்றும் அதிபர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

சீனர்கள்
அதன் பின்னர், இப்போது சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கையில் இப்போது நிலைமையைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலக வங்கியிடம் கடன் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே இலங்கையில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்து வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

கவலை
இலங்கையில் சீனர்களின் நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்குக் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடற்கரையோரத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சில வாரங்களுக்கு முன்பு தமிழக உளவு அமைப்பும் கூட எச்சரிக்கை வெளியிட்டது. அங்குச் சீனர்களின் நடமாட்டம் மற்றும் சீன டிரோன்கள், சாட்டிலைட்கள் உள்ளிட்ட ஹைடெக் கேஜட்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

விளக்கம்
இலங்கையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தச் சூழலில், இது தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முக்கிய விளக்கத்தைக் கொடுத்து உள்ளார். இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய டக்ளஸ் தேவானந்தா, சீன ராணுவத்தினர் இலங்கையில் இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலுமாக மறுத்துள்ளார். குறிப்பாக வடக்கு இலங்கை பகுதிகளில் சீனர்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

மறுப்பு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சீன ராணுவத்தினர் பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் உள்ளதாகவும் இதனால் இந்தியா தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் இந்தப் பண்ணைகளுக்கும் சீனர்களுக்கும் தொடுப்பு இல்லை. அரியாலை கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்திற்குச் சீனர்கள் வந்து இருந்தனர்.

முதலீடு
அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். குறிப்பாகச் சீனர்கள் வேறு யாரும் வடக்கில் கடல் அட்டை செயல்பாடுகளில் கூட ஈடுபடவில்லை. இந்தியாவும் சரி சீனாவும் சரி கடல் அட்டை பண்ணைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளேன். இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை.

இந்தியா தான் முதல் சாய்ஸ்
அதேநேரம் என்னைப் பொறுத்தவரையில் இந்தியா அல்லது சீனா என்று கேள்வி எழுப்பினால் இந்தியாவே சரியாக இருக்கும் எனக் கூறுவேன்" என்று அவர் பதில் அளித்தார். இலங்கையில் சீனர்கள், குறிப்பாகச் சீன ராணுவத்தினரின் நடமாட்டம் உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அந்நாட்டு அமைச்சரின் இந்த விளக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications