இலங்கையின் புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியா.. அடேங்கப்பா ராஜபக்ச சாதனையை முறியடிச்சவரா இவர்!
கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஜேவிபி கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றுள்ளார். யார் இவர்? அரசியலில் இவர் கடந்து வந்த பாதை குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடிக்கு முடிவுக்கட்டப்படுமா? அல்லது சிக்கல் மேலும் தீவிரமாகுமா? என்கிற கேள்விக்கு அதிபர் தேர்தல் பதில் அளிக்கும் என்று சொல்லப்பட்டது. எனவே இந்த தேர்தலை சர்வதேச நாடுகள் கவனித்து வந்தன. இதில் இடதுசாரி கட்சியான 'மக்கள் விடுதலை முன்னணி' (ஜனதா விமுக்தி பெரமுன) வேட்பாளரான அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். இதனையடுத்து பிரதமராக இருந்த திணேஷ் குணவர்த்தன உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே, இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய இன்னும் 11 மாதங்கள் இருந்த போதும், புதிய அரசுக்காக அது கலைக்கப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ஹரிணி சட்டப்படியான பிரதமராக தொடர முடியும். மக்கள் விடுதலை முன்னணி எதிர்பார்த்தபடி, ஹரிணி மிகப்பெரிய அளவில் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் சுமார் 6.55 லட்சம் விருப்ப வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் இவ்வளவு அதிகமான வாக்குகளை இதற்கு முன்னர் எந்த நாடாளுமன்ற வேட்பாளரும் வாங்கியது கிடையாது. ஏற்கெனவே ராஜபக்ச 5.2 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதுவே அதிகபட்ச வாக்குகளாக இருந்தது. ஆனால் இந்த சாதனையை ஹரிணி முறியடித்துள்ளார்.
பெண் உரிமை ஆர்வலராகவும், கல்வியாளராகவும் ஹரிணி அறியப்பட்டிருந்தாலும் இடதுசாரி சித்தாந்தத்தில் தீவிர பிடிப்புடையவராக அவர் அறியப்படுகிறார். அதேபோல இலங்கையின் கல்வி முறை, வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த தனது ஆய்வுக்காகவும் இவர் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார். ஆசியாவிலேயே மிகப்பழமையான கல்வி முறையை இலங்கை கொண்டிருப்பதாகவும், இது காலாவதியாகவிட்டதால் மாற்றம் வேண்டும் என்றும் இவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
டெல்லி பல்கலைக்கழத்தின் இந்து கல்லூரியில் சமூகவியலில் இளங்கலைப் பட்டமும், ஆஸ்திரேலியாவின் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் மானிடவியலில் முதுகலைப் பட்டமும் ஹரிணி பெற்றிருக்கிறார். மேலும் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மானிடவியலில் முனைவர் பட்டத்தையும் இவர் பெற்றிருக்கிறார். சில ஆண்டுகளாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளவியல் பயிற்சியாளராகப் பணியாற்றிய ஹரிணி, பின்னர் இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்ற தொடங்கினார்.
தொடக்கம் முதல் பாலின சமத்துவம், கல்வி அமைப்பில் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த இவருக்கு, ஜேவிபி கட்சியுடன் 2019ல் தொடர்பு கிடைக்கிறது. 2020 தேர்தலில் அநுரவுக்கு ஆதரவாக இவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். மறுபுறம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
புதிய பிரதமரான இவர், அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை பணி என்று கூறியுள்ளார். உள்நாட்டு போர் தொடங்கியதிலிருந்து தமிழ் மக்களுக்கு இலங்கையில் ஏராளமான கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன. மற்ற சிறுபான்மையினரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நீதிக்கான தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே நீதித்துறையை அனைத்து மக்களுக்குமானதாக மாற்ற ஹரிணி உறுதியேற்றுள்ளார்.
மேலும், அரசு நிறுவனங்களில் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல்
அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக பின்தங்கிய சமூகத்தினருக்கு தரமான கல்வியை உறுதி செய்தல்
தரமான கல்விக்கான ஆசிரியர்களை உருவாக்குதல், பாடத்திடங்களை நவீனமயப்படுத்துதல்
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல்
சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகத்தை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்தல்
புதிய கண்டுபிடிப்புகளுக்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் முதலீடு செய்தல்
பொது சுகாதார அமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல்
நோய் தடுப்பு, பராமரிப்பு உள்ளிட்ட சுகாதார மேம்பாட்டு திட்டங்களில் கவனம் செலுத்துதல்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பது
என பல திட்டங்களை ஹரிணி செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications