கூகுள் பேவில் 42 லட்சம் லஞ்சம்? தமிழ்நாட்டையே அதிர வைத்த சப் ரிஜிஸ்டர் சங்கீதா.. என்ன நடந்தது?
கடலூர்: கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தில் துணை சாா்பதிவாளராக பணிபுரியும் சங்கீதா கூகுள் பே மூலம் 42 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். இதேபோல் அவரது அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் புறவழிச்சாலையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு துணை சாா்பதிவாளராக சங்கீதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். துணை சார்பதிவாளர் சங்கீதா, விருத்தாசலம் பத்திர ஆபிஸ்க்கு பதிய வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவம், அந்த லஞ்சத்தை 'ஜி-பே', 'போன்-பே ' மூலமாகவும், நேரடியாகவும் பெற்று வந்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், திருவேங்கடம், ஆய்வுக்குழு தலைவர் முருகன் மற்றும் போலீசார் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு விருத்தாசலம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள்.
பதிவுத்துறை அலுவகத்தில் ஒவ்வொரு அறையும், அனைத்து இடங்களிலும் தீவிரமாக போலீசார் சோதனை நடத்தினார்கள். இரவு வரை அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக நடத்திய சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை பத்திரம் பதிய வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு பணியில் இருந்த சப்-ரிஜிஸ்டர் சங்கீதாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் இதுவரை லஞ்சமாக பெற்ற ரூபாய் 42 லட்சத்தை அவருடைய வங்கி கணக்கில் இருந்து Goole pay , bank transfer மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சங்கீதா அந்த லஞ்ச பணத்தின் மூலம் வீட்டு மனைகள் வாங்கியதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகளும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கியது.
இதையடுத்து சப்-ரிஜிஸ்டர் சங்கீதாவையும், அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமாரையும் போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். நள்ளிரவு 1 மணி வரை விசாரணை நடத்திய அதிகாரிகள்., பின்னர் கடலூருக்கு அழைத்து இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்
இதனிடையே சப்-ரிஜிஸ்டர் சங்கீதா கைதாவாரா? மேலும் ஏதாவது சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளாரா? என்பது இன்றைய விசாரணையின் முடிவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications