மக்களே உஷார்.. வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. கடலூர், திருவண்ணாமலையில் 12 பேருக்கு டெங்கு உறுதி!
கடலூர்: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சல் தற்போது தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்குரிய சிகிச்சையினை அளித்து, நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்யவும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசுவதுடன், பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளன. மேலும் பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்கிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், முட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் 6 பேரும் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்க்க டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் அரசும், சுகாதாரத்துறையும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரியில், தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜிப்மர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தருமபுரி நடுத்தெருவை சேர்ந்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications