தொற்றுக்கு எதிராக பயன்படும்.. 'சானிடைசர்' கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு.. 9 பேரை தூக்கிய போலீசார்
கடலூர்: கடலூரில் சானிடைசர் கொண்டு போலி மதுபானம் தயாரித்து விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கொரோனவை ஒழிக்க 14 நாள்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்? சீரம் விளக்கம்
மருந்தகங்கள், பால் பூத்கள், காய்கறி. மளிகை கடைகள்(குறிப்பிட்ட நேரம் மட்டும்) தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகள்
எப்போதும் அரசுக்கு வருமானத்தை ஈட்டி தரும் டாஸ்மாக் கடைகளும் ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று மது பிரியர்கள் ஒரு பக்கம் புலம்பி தவித்து வருகின்றனர். ஆனால் இவர்களை குறி வைத்து போலி மதுபானங்களை தயாரிக்கும் சமூக விரோத செயல்களில் சில நபர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
போலி மதுபானங்கள் விற்பனை
வீட்டில் போலியாக மதுபானங்கள் தயாரித்து விற்று வந்துள்ளார் கடலூர் மாவட்டம் இராமநாதன் குப்பம் கிராமத்தை சேர்ந்த உத்திராபதி (33). இது குறித்த தகவல் குள்ளஞ்சாவடி போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. இதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக உத்திராபதி வீட்டுக்கு விரைந்து சென்றபோது அங்கு போலி மதுபானங்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சானிடைசர் கொண்டு தயாரிப்பு
அப்போது அவர்கள் கொரோனா தொற்றை தடுக்க பயன்படும் சானிடைசரை கொண்டு மதுபானங்கள் தயாரித்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது 400 லிட்டர் சானிடைசர் கொண்டு பிரபல மதுபான நிறுவனங்கள் பெயரில் போலி மதுபானம் தயாரித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு இருந்த உத்திராபதி உள்பட 9 பேரை போலீசார் கொத்தாக அள்ளி கைது செய்தனர்.
கடும் நடவடிக்கை
இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2,500 போலி மதுபான பாட்டில்கள், மதுபானம் தயாரிக்கும் எந்திரங்கள், போலி ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் நிலையில் தமிழகத்தில் இதுபோல் போலி மது தயாரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.