பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு.. இரு வேளாண் துறை இயக்குநர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட்
கடலூர்: பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக இரண்டு வேளாண் உதவி இயக்குனர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் 13 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது போல் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு உதவி இயக்குனர் உள்பட 3 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தவறான முறையைப் பயன்படுத்தி அதிகாரிகளால் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்துள்ளதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி இயக்குனர்கள் தியாகதுருகம் அமுதா, ரிஷிவந்தியம் ராஜசேகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார். மேலும் 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், 4 பயிர் அறுவடை பரிசோதகர்கள், இரண்டு கணினி ஆபரேட்டர்கள் என மொத்தம் 13 தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிரதம மந்திரி விவசாயிகள் ஆதரவு நிதி முறைகேட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லம் வேளாண் துறை அலுவலக உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் மேலும் தற்காலிக பணியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications