‘கடல்’ ஏரியா.. பாஜக வீசிய வலையில் சிக்கிய பெரிய மீன்கள்.. நாளை இறங்கும் அண்ணாமலை.. அணி தாவ திட்டம்?
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கியமான மீன்களை தங்கள் வலையில் பாஜக இழுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் நிலையில், கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய இருக்கிறார்கள் என பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்தி - திமுக vs பாஜக
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதற்கு எதிராக திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜகவினர் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். மக்களின் கவனத்தை திசை திருப்பவே திமுக இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

பாஜக ஆர்ப்பாட்டம்
மேலும், திமுகவை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். அண்ணாமலை அறிவித்தபடி, நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில், திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் எனச் சூளுரைத்துள்ளார் அண்ணாமலை. கடலூரில் நடைபெறும் பாஜக ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை நாளை பங்கேற்க இருக்கிறார்.

கடலூரில் இறங்கும் அண்ணாமலை
கடலூரில் தலைமை தபால் நிலையம் எதிரே பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவிருப்பதாக பாஜகவின் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். கடலூர் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பதற்கு என்ன பின்னணி என விசாரித்தோம். பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, கடலூர் மாவட்ட திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் பாஜகவில் இணைய இருக்கிறார்கள். அதற்காகவே அண்ணாமலை கடலூர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.

பாஜக அசைன்மெண்ட்
தமிழகம் முழுவதும், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுக்கும் வேலையில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 2024 லோக்சபா தேர்தலை குறிவைத்து கட்சியை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ள பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளது. அந்த வகையில், கடலூர் பாஜகவினர் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வடலூரைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக பிரமுகரை சந்தித்த பாஜக அமைச்சர்
சமீபத்தில் கடலூர் வந்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபேலா, கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிவிட்டுச் சென்றார். அப்போது தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த முக்கிய திமுக பிரமுகர் ஒருவரையும், பாஜக அமைச்சர் புருஷோத்தம் ரூபேலா சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது. அவர் பாஜகவிற்கு தாவ தயாராகி விட்டதாகத் தெரிகிறது.

அண்ணாமலை முன்னிலையில்
மேலும், கடலூர் மாநகராட்சியில் உள்ள அதிருப்தி திமுக கவுன்சிலர்கள், உட்கட்சி தேர்தலில் ஓரங்கட்டப்பட்டதால், தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் என பலருடனும் பாஜகவினர் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் நாளை கடலூரில் நடைபெற இருக்கும் பாஜக ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக கடலூர் பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது கடலூர் மாவட்டத்தில் மற்ற கட்சிகள் இடையே சலசலசப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications