சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. 2 கார்கள் மீது அரசு பஸ் மோதி விபத்து.. 9 பேர் பலி
கடலூர்: திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு எஸ்.இ.டி.சி பஸ்சின் டயர் வெடித்ததால் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு எதிரே வரும் சாலையில் சென்றது. இதில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது பஸ் மோதியது.

கார்கள் மீது மோதிய எஸ்.இ.டி.சி பஸ்
இந்த கொடூர விபத்தில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காரில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு பணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கு காரணம் என்ன?
மேலும் இந்த காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்தும் அவர்களை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் சென்று வருகிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. அரசு பஸ்சின் டயர் வெடித்ததே விபத்துகான காரணம் என கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் இன்று மாலை சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதிய விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி
மேலும், இவ்விபத்தில், பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications