இதுதான் தமிழ்நாடு! "படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம்".. தரமான சம்பவம்
கடலூர்: சிதம்பரம் கிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பெரும்பாலான பழங்குடியின மாணவ மாணவியர் 8ம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்திவிடும் நிலையில், 9ம் வகுப்பில் சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
படிப்பு தான் இந்த உலகத்தில் ஆகச்சிறந்த சொத்து என்பதை தமிழக பெற்றோர்கள் பலர் என்றோ உணர்ந்து விட்டனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி வரை படிக்க வைக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை கடந்த 20 வருடங்களில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட இதுவரை ஆண்ட அரசுகளும் அனுமதிப்பது இல்லை. படிக்காமல் விட்டால் அந்த குழந்தையை தேடிக்கண்டுபிடித்து படிக்க வைக்க அரசுகள் தீவிரமாக முனைப்பு காட்டி வந்தன. 7வது , 8வது, 9வது படிப்பவர்கள் படிப்பை பாதியில் கைவிடுவதை தமிழக அரசு தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளின் பெற்றோரிடம் சென்று படிப்பின் அருமையை எடுத்துக்கூறி படிக்க வைக்க ஆசிரியர்களும் பெரும் முயற்சி எடுத்து வந்தார்கள். அதன் காரணமாகவே இன்றைக்கு பலரும் 10ம்வகுப்பை தாண்டிவிட்டார்கள். அதேபோல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தமிழகத்தில் இருப்பதால் யாரும் பெயில் ஆவது இல்லை. இதுவும் பலர் உயர்கல்வி படிக்க காரணமாக அமைந்தது.
அதேபோல் 8ம் வகுப்பு வரை மட்டுமே இருந்த பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் 8ம் வகுப்புடன் கல்வி கற்பதை நிறுத்திய பல பெண்கள் அதன்பிறகு 10ம்வகுப்பு வரை படித்தார்கள். அதை தொடர்ந்து 12ம் வகுப்பு வரை பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் 12ம் வகுப்பும் இன்றைக்கு பல மாணவ மாணவியர் படித்துள்ளார்கள்.
தற்போதைய நிலையில் பள்ளி கல்வித்துறை மாணவர்கள் பெயில் ஆனாலும், அவர்கள் படிக்காமல் போனாலும் சரி, தனிக்கவனம் எடுத்து அவர்களை அழைத்து படிக்க வைக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு 12ம் வகுப்பு வரை அனைத்து பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. காலை உணவும் , மதிய உணவும் வழங்கப்படுகிறது. இலவச கல்வி வழங்கப்படுவதால் ஏழை மக்களின் குழந்தைகள் பலர் உயர்கல்வி கற்று முன்னேறி வருகிறார்கள். படிப்பு தான் தமிழக மக்களின் உண்மையான சொத்து என்பது அடிக்கடி நிரூபணம் ஆகி உள்ளது.
இந்நிலையில் சிதம்பரம் கிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பெரும்பாலான பழங்குடியின மாணவ மாணவியர் 8ம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்திவிடும் நிலை இருந்து வந்தது. இந்த ஆண்டு9ம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அப்படி சேர்ந்த மாணவ மாணவியருககு பேரூராட்சி சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
"காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ,ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம்!! என்ற வசனம் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் வரும். அதை பழங்குடியின மக்கள் உணர்ந்துள்ளனர். இப்போது படிக்கவும் தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications