பரிந்துரை கடிதம் வாங்கிய பெண்ணுக்கு கொரோனா- கடலூர் எம்.பி.ரமேஷ் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதி திமுக எம்பி ரமேஷிடம் பரிந்துரை கடிதம் வாங்கிய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எம்பி ரமேஷின் வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் கடலூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட இருந்தது. கடந்த இரண்டு தினங்களில் திடீரென 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது புட்டபர்த்தி சாயிபாபா கோயிலுக்கு சென்று வந்த மூதாட்டி மற்றும் அவரது உறவினர்கள், கோயம்பேடு சந்தைக்கு சென்றுவந்தவர்கள் என மொத்தம் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயாம்பேடு சந்தைக்கு சென்று வந்த 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடலூர் எம்பி ரமேஷிடம் பரிந்துரை கடிதம் வாங்கிய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
7 மாநிலங்கள்.. 5 நகரங்கள்.. தொடர்ந்து உயரும் கொரோனா கிராஃப்.. பயன் அளிக்காத 3 லாக்டவுன்கள்!
எம்.பி. ரமேஷின் வீடு பண்ருட்டி போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ளது. எம்பி ரமேஷின் வீட்டிற்கு கடந்த 27ஆம் தேதி வந்த பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான பரிந்துரை கடிதம் வேண்டுமென கேட்டுள்ளார். எம்பியும் அவருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அந்தப் பெண்ணின் மகன் மற்றும் மருமகளுக்கும், உறவுக்காரப் பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அந்த பெண்ணுக்கு பரிந்துரை கடிதம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷின் வீட்டிற்கு இன்று வந்த சுகாதாரத்துறை குழுவினர், அந்த வீடு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என அடையாளப்படுத்தி அதற்கான ஸ்டிக்கர் ஒட்டினர்.
மேலும் எம்பி ரமேஷ், அவருடைய ஓட்டுநர், அவருடைய உதவியாளர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி உள்ளனர்.