கடலூரில் பள்ளி ஷூவில் பாம்பு! செக் செய்யாமல் போட்ட சிறுவனை கடித்ததால் தீவிர சிகிச்சை
கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவன், அணிந்த பள்ளி ஷூவில் இருந்த பாம்பு, அந்த சிறுவனை கடித்ததில் அவனுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
திட்டக்குடி தொழுதூர் வஉசி நகரைச் சேர்ந்தவர் கவுசிக். இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது ஷூவை அணிய முற்பட்டு காலை ஷூவுக்குள் விட்டபோது ஏதோ கடித்தது போல் இருந்தது.

உடனே அலறி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் ஷூவை பார்த்த போது அதில் சிறிய பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மயங்கிய சிறுவனை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுவன் ஷூவை வீட்டு வாசலில் விட்டிருந்தது தெரியவந்தது. அந்த வீட்டை சுற்றி புதராக இருந்த நிலையில் குட்டிப்பாம்பு ஒன்று அடக்கமாக ஷூவுக்குள் புகுந்துவிட்டது. ஷூ வை தட்டாமல் போட்ட சிறுவனை பாம்பு கடித்துவிட்டது.
இது போன்று ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு இதே கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் உள்பட இருவரின் ஷூவில் நல்லப் பாம்பு ஒன்று பதுங்கி இருந்து படமெடுத்து ஆடியது. நல்வாய்ப்பாக பாம்பு ஷூவுக்குள் இருப்பதை அறிந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
அது போல் கடந்த 2023 ஆம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவனின் காலணிக்குள் பாம்பு இருந்ததை அறிந்த மாணவன் பாம்பு பிடிக்கும் வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் வந்து பாம்பு பிடித்து அது கொம்பேறிமூக்கன் என தெரியவந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பிரிவு ரோட்டைச் சேர்ந்தவர் முரளிதரன். என்ஜீனியர். இவரது மகன் சத்யாஸ். இவர் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது நெளிந்து கொண்டிருந்ததை அடுத்து ஆசிரியர் விசாரித்து ஷூவை பார்க்க அதை கழற்ற சொன்னார். அப்போது ஷூவில் இருந்து வெளியே காலை எடுத்த போது காலில் ரத்தம் இருந்தது. அப்போது உற்று பார்த்த போது இரண்டு அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு அதில் இருந்தது. அந்த பாம்பு கடித்ததில்தான் சிறுவனுக்கு ரத்தம் கொட்டியது. இதையடுத்து சிறுவன் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான்.












Click it and Unblock the Notifications