போனா வராது.. பொழுதானா கிடைக்காது.. ரூ.20க்கு ஒரு கிலோ தக்காளி.. முட்டிமோதிய மக்கள்! எங்கே தெரியுமா?
கடலூர்: தக்காளி விலை ரூ.100ஐக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கடலூரில் ஒரு கடையில் தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளி வாங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்ககளில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கபப்ட்டுள்ளதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 130 ரூபாய் வரை தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அரசு தானாக முன்வந்து ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தது.

தக்காளி ரேட்: அதன்படி, ரேஷன் கடைகளில் ஒரு குடும்பத்துக்கு 1 கிலோ தக்காளி என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைகளில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார கடைகளில் மாறுபட்ட விலையில் தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மார்க்கெட்டில் தக்காளி வாங்குவது குறைந்தது. தக்காளிக்கான தேவை மார்க்கெட்டில் குறைந்த நிலையில் தானாக ஒரே நாளில் அதிரடியாக தக்காளி விலை குறைந்துள்ளது. அதன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. தக்காளி கிலோ ரூபாய் 80 - 90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடலூரில் பரபரப்பு: இந்த நிலையில் இன்று காலை கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் ராஜேஷ் என்கின்ற வியாபாரி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் என அறிவித்து தக்காளி விற்பனையை தொடங்கினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்து கடையில் கிலோ 20 ரூபாய்க்கு தக்காளியை வாங்கி சென்றனர்.
இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள், இல்லத்தரசிகள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டு தக்காளிச் வாங்கி சென்றனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. சிறிது நேரத்திலேயே வியாபாரி ராஜேஷ் கொண்டு வந்த அனைத்து தக்காளிகளும் விற்றுத் தீர்ந்தன.
தக்காளி கிலோ ரூ. 20: இது குறித்து அந்த காய்கறி கடை உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில், "கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து சுமார் 1.5 டன் தக்காளி எங்கள் கடைக்கு வந்தது. தற்போது தமிழ்நாட்டில் ரூ. 100 முதல் ரூ. 150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
50 கிராம், 100 கிராம் என்ற அளவிற்கு மட்டுமே தக்காளி வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனை செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற நோக்கில் விற்பனை செய்து வருகிறோம்.

600 கிலோ தக்காளி: கர்நாடகா மாநிலம் கோலாரில் இருந்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி வாங்கிக்கொண்டு இங்கு 20 ரூபாய்க்கு சேவை நோக்கத்துடன் மக்களுக்கு விற்பனை செய்து உள்ளேன். இன்று காலை 600 கிலோ தக்காளி வரவழைத்த நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கியதால் தீர்ந்துவிட்டன.
கொரோனா காலத்தில் 5 கிலோ காய்கறிகள் ரூ.100க்கு விற்பனை செய்தேன். வெங்காயம் கிலோ ரூ 100க்கு விற்பனை செய்யப்பட்ட போது நான் வெறும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். தக்காளியை குறைந்த விலையில் விற்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications