“போலீசா இருக்கும்போது கூட கிரிமினலை பிடிச்சாரானு தெரியல.. ஆனா..” - அண்ணாமலையை விளாசிய இளங்கோவன்!
கடலூர்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கிரிமினல்களை எல்லாம் பிடித்து பா.ஜ.க.வில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக நுழைய முடியவில்லை என்பதற்காக ஆளுநரை பயன்படுத்தி, தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கிறார்கள் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
யாரைப் பாதுகாக்க வேண்டுமோ அவர்களை பாதுகாக்க தவறி விட்டது மத்திய அரசு. பசுவைப் பாதுகாக்கிறார்கள். சமஸ்கிருதம், இந்து மதம் போன்றவற்றை பாதுகாக்கிறார்கள் என அவர் விமர்சித்துள்ளார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பு செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், தமிழகத்தில் பாஜக நுழைய முடியவில்லை என்பதற்காக ஆளுநரை பயன்படுத்தி, தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிஎஸ் அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோது எத்தனை கிரிமினல்களை பிடித்தார் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இங்கு உள்ள கிரிமினல்களை எல்லாம் பிடித்து பா.ஜ.கவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
மக்களுக்காக மத்திய அரசு என்ன செய்தது? மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு 2 பணக்காரர்களின் அரசு. மக்களுக்காக பாடுபடும் மக்கள் நல அரசு தமிழகத்தில் உள்ள தி.மு.க அரசு எனப் பேசினார்.

மக்களை பாதுகாப்பதில்லை
எங்களது வளர்ச்சி குஜராத் மாடல் வளர்ச்சி என்று சொன்னார் பிரதமர் மோடி. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி அங்கு வந்தபோது சில பகுதிகளை பார்க்கக்கூடாது என்பதற்காக சுவர் அமைத்தார்கள். யாரைப் பாதுகாக்க வேண்டுமோ அவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசு தவறி விட்டது.
பசுவைப் பாதுகாக்கிறார்கள். சமஸ்கிருதம், இந்து மதம் போன்றவற்றை பாதுகாக்கிறார்கள். குஜராத்தில் இரண்டு பணக்காரர்களை பாதுகாக்கிறார்கள். மக்களை பாதுகாக்காமல் நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். இந்த சூழலில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு மு.க.ஸ்டாலினால்தான் காரணம்.

எப்படி நிறைவேற்றுவது
மேலும் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நகையை வைக்காமல் அ.தி.மு.க காரர்கள் பல கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள். போலி நகையை வைத்தும் நகைக்கடன் வாங்கி இருக்கிறார்கள். இப்படி செய்தால் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும்.
ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசு வரியை வசூலித்துக் கொண்டு நமக்கு அதில் பங்கை கொடுக்கிறது. அதை கேட்பதற்கு நாம் பலமுறை கடிதம் எழுத வேண்டும். அமைச்சர்களை அனுப்ப வேண்டும். அப்போது கூட 4 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டிய இடத்தில் 400 கோடி ரூபாய் கொடுத்து விட்டு, நிதியை கொடுத்துவிட்டேன் என்று கூறுவார்கள்.

முன்னாள் அமைச்சர்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. அதில் உச்சகட்டமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவரை வளர்த்து ஆளாக்கிய ஜெயலலிதாவுன் கொடநாடு வீட்டிலேயே கொள்ளை அடிக்க ஆள் அனுப்பினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

எல்லாவற்றிலும் தில்லுமுல்லு
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலக்கரியை வழங்கவில்லை என்பதால் தான் மின்தடை ஏற்படுகிறது. அதானி தோண்டி எடுக்கும் நிலக்கரி இந்தியா வந்த பிறகுதான் நிலக்கரி கிடைக்கும். பாஜக எம்.பி.க்கள் பதவி ஏற்கும்போது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவேன் என்று கடவுளறிய உறுதிமொழி ஏற்றீர்கள். ஆனால் இப்போது அதை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாமல் கடவுளையும் ஏமாற்றுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மீறி எல்லா செயல்களையும் செய்கிறார்கள். எல்லாவற்றிலும் தில்லுமுல்லு செய்கிறார்கள்.

ஆளுநரை வைத்து
சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும்தான் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உண்டு. மற்ற யாருக்கும் கிடையாது. குடியரசுத் தலைவருக்கு கூட அவசர சட்டம் நிறைவேற்றுவதற்குதான் அதிகாரமுண்டு. அதற்கும் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அவர் அதை ஓராண்டு காலத்திற்கு வைத்து விட்டு பின்னர் மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்புகிறார். பா.ஜ.க இங்கு நுழைய முடியவில்லை. அதனால் ஆளுநரை பயன்படுத்தி இந்த அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கிறார்கள்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications