திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி!
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிலும் திமுக, அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, அதற்கு பலியானார்.

அவரை தொடர்ந்து வரிசையாக பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திமுகவில் செஞ்சி சட்டசபை உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் தற்போது குணமடைந்து விட்டார்.
அதிமுகவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் தமிழக அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டு நாட்கள் முன் அதிமுக எம்எல்ஏ நிலோபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது .
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற இருக்கிறார்.












Click it and Unblock the Notifications