உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில், 3-வது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவிலும் போராட்டம் நீடித்து வருவதால், சென்னை, திருச்சி, சேலம் சாலையில் கட்டணமின்றி வாகனங்கள் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஊழியர்களை ஆள்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியிலும் பாஸ்டேக் நடைமுறைக்கு வந்ததால், அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டது.
அதன்படி, ஆட்குறைப்பின் முதல்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் 28 ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஊழியர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டு, அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பணிக்கு வரவேண்டாம் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
இதனைக் கண்டித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர், சுங்கச்சாவடி நிர்வாக அலுலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது.
சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக கடந்து செல்கின்றன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் 100க்கான வாகனங்கள் பணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்கின்றன.
விடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமாக வாகனங்கள் பயணித்து வருகின்றன. இந்த சூழலில், சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் 3-வது நாளாக கட்டணமின்றி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 ஹீரோ.. 3 ஹீரோயின்.. பொன்னியின்செல்வனும், பாண்டியன் ஸ்டோர்ஸும்.. எப்டிய்யா இப்டிலாம் பீல் பண்றீங்க?