சிவபக்தரின் கன்னத்தில் ‛பளார்’.. 2 தீட்சிதர்கள் மீது வழக்கு! சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரபரப்பு
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி வீதி உலாவின்போது சிவபக்தரின் கன்னத்தில் தீட்சிதர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிவபக்தர் கொடுத்த புகாரின் பேரில் 2 தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் கோவில் தீட்சிதர்கள் சர்ச்சையில் சிக்கினர். 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததாக எழுந்த புகார் புயலை கிளப்பியது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை எடுத்தனர். போலீஸ் மற்றும் தீட்சிதர்கள் தரப்பில் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் இந்த பிரச்சனை என்பது முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே தான் தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலின் 2 தீட்சிதர்கள் தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதாவது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கார் வண்ணன் என்பவர் தரிசனம் செய்ய சென்றார். இவர் தீவிர சிவபக்தர் ஆவார். அப்போது சாமி வீதி உலா வந்தது.
இதையடுத்து சாமி தரிசனம் செய்ய கார்வண்ணன் முயன்றுள்ளார். அப்போது அவர் சாமி வீதி உலாவுக்கு எதிரே நின்றதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் கார்வண்ணன் மற்றும் தீட்சிதர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியுள்ளது.
அதாவது 2 தீட்சிதர்கள் கார்வண்ணனின் கன்னத்தில் தாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், காயம் அடைந்த கார்வண்ணன் சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின்போது 2 தீட்சிதர்கள் கார்வண்ணனை தாக்கியது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் சபாபதி தீட்சிதர் மற்றும் ஸ்ரீ வர்ஷன் தீட்சிதர் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications