கடலூரில் பழிக்குப் பழி..ஒரே குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்..பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
செல்லாங்குப்பம் பகுதியில் தீயில் கருகி பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. தீயில் கருகி படுகாயமடைந்த சத்குரு என்பவரின் மனைவி தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கடலூர்: குடும்ப தகராறு முன்விரோதம் காரணமாக கடலூரில் 2 குழந்தைகள் உள்ளிட்ட4 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கோபம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு மிருகமாக மாற்றும் என்பதற்கு கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒரு உதாரணமாகும். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சின்ன தகராறு பழிக்கு பழியாக கொலை வரை கொண்டு சென்றுள்ளது. இந்த கொலைக்கு என்ன காரணம் அதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம்.

கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 35. இவரது மனைவி தமிழரசி 31, இவர்களுக்கு ஹாசினி என்ற 1 வயது குழந்தையும், 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
தமிழரசியின் தங்கை தனலட்சுமி, அவரது கணவர் சத்குரு. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இதில் சத்குருவும் தனலட்சுமியும் கடலூர் தேவனாம்பட்டினத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சத்குருவிற்கும், தனலட்சுமிக்கும் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தனலட்சுமி அவரது கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனலட்சுமி பிரகாஷின் வீட்டிற்கு வந்தார். அங்கு பிரகாஷின் அம்மா செல்வியுடன் வீட்டில் தங்கியிருந்தார்.
பிரகாஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமியிடம் சத்குரு போனில் பேசியுள்ளார். சத்குருவுக்கும் தனலட்சுமிக்கும் இடையே உள்ள பிரச்சனை காரணமாக சத்குரு நேரடியாக பிரகாஷின் வீட்டிற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சண்டை பெரிதாகவே சத்குரு தான் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் எடுத்து வீட்டில் இருந்தவர்கள் மீது ஊற்றிவிட்டு வீட்டை பூட்டி கொண்டு தீ வைத்துள்ளார். அப்போது சத்குரு மீதும் பெட்ரோல் பட்டுள்ளது. தீ கொளுந்து விட்டு எரிந்ததில் தமிழரசி அவரது குழந்தை ஹாசினி மற்றும் தனலட்சுமியின் 4 மாத கை குழந்தை மற்றும் சத்குரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் தீயினால் புகை மண்டலமாக காணப்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயில் சிக்கியவர்களை மீட்டனர்
தனலட்சுமியும் அவரது தாயும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் 50 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் தமிழரசி, குழந்தை ஹாசினி மற்றும் ஆறு மாத ஆண் குழந்தை, சத்குரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்குருவின் மனைவி தனலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பழிக்குபழி வாங்கும் நோக்கத்தில் ஒரு குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications