இயக்குநர் சேரன் திடீர் டென்ஷன்! தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவருடன் வாக்குவாதம்! அதிர்ந்த கடலூர்
கடலூர்: கடலூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த இயக்குநரும், நடிகருமான சேரன் திடீரென்று இறங்கி வந்து பின்னால் வந்த தனியார் பஸ்சின் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் இருப்பவர் சேரன். இவரது திரைப்படங்கள் என்பது கிராமங்கள் மற்றும் குடும்ப வாழ்வியலை சார்ந்து இருக்கும். அதேவேளையில் சமூகத்தில் நடக்கும் ஏதாவது ஒரு பிரச்சனையை படத்தில் காட்டி இருப்பார்.

இவர் இயக்கிய வெற்றிக் கொடிகட்டு திரைப்படத்தில் இளைஞர்கள் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு பணத்தை கட்டி ஏமாறுவதையும், அதன்பிறகு அவர்கள் படும் வலியை காட்டியிருப்பார். பாண்டவர் பூமி திரைப்படத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணவக்கொலை செய்வதையும், குடும்பத்தின் உள்ள உறவுகளின் பாசத்தையும் காட்டி கண்கலங்க வைத்திருப்பார்.
முதலில் இயக்குநராக இருந்த சேரன் அதன்பிறகு நடிக்கவும் தொடங்கினார். ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிசம், முரண், யுத்தம் செய் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்நிலையில் தான் இன்று சேரன் தனது காரில் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிரருந்தார்.
கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தனியார் பஸ் ஒன்று வந்தது. அதன் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார். இதனால் சவுண்ட் ஹாரன் சேரனின் காதை கழித்துள்ளது.
மேலும் அந்த சாலையில் பஸ் முந்தி செல்ல சேரனின் கார் இடம் வழங்கியது. ஆனாலும் போதிய இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பஸ் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே சென்றுள்ளார். இதனால் டென்ஷனான சேரன் உடனடியாக தனது காரை சாலையில் நிறுத்தி கீழே இறங்கினார். பின்னால் வந்த தனியார் பஸ்சும் சாலையில் நின்றது.
இதையடுத்து டிரைவரை பார்த்த சேரன், ‛‛கொஞ்சம் பொறுமையாக வந்தால் தான் என்ன? அனைவரும் இந்த சாலையில் தான் செல்ல வேண்டும். ஏன் அதிக ஒலி எழுப்புகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து அவர்கள் சேரனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தான் சேரன் தனது காரை நிறுத்திவிட்டு தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
கடலூர் - புதுச்சேரியை பொறுத்தவரை ஏராளமாக தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த தனியார் பஸ்கள் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இயக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு பஸ்சையும் முந்தி சென்றால் தான் பயணிகளை ஏற்றி லாபம் சம்பாதிக்க முடியும் என்பதால் இந்த சாலையில் எப்போதும் தனியார் பஸ்கள் வேகமாக செல்வதோடு, அதிக முறை ஹாரன் அடித்து செல்வதும் தொடர்ந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications