வழிப்பறி, போலீஸ் மீது அட்டாக்.. சினிமாவை மிஞ்சிய பைக் சேஸ்.. ரவுடி விஜயை என்கவுன்டர் செய்தது எப்படி?
கடலூர்: கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரை தாக்கிவிட்டு, பிரபல ரவுடியான மொட்டை விஜய் பைக்கில் தப்பி செல்லும் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் 3 பேர் மின்னல் வேகத்தில் சென்ற நிலையில், அவர்களை போலீசார் விரட்டி பிடித்துள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியான மொட்டை விஜய் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். 19 வயதாகும் மொட்டை விஜய், புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவர் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் கடலூர் எம்.புதூர் அருகே காளிமுத்து என்பவர் வந்துள்ளார்.

அப்போது, மொட்டை விஜய் கும்பல் வழிமறித்து செல்ஃபோன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி காட்சிகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மொட்டை விஜய் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல், எம்.புதூர் அருகே உள்ள ஒரு தோப்பில் மறைந்திருந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதன்பின் தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்த நிலையில், திடீரென மொட்டை விஜய் அரிவாளால் போலீசார் 2 பேரை தாக்கிவிட்டு பைக்கில் ஏறி தப்ப முயன்றுள்ளார்.
அவர் பைக்கில் 3 பேருடன் தப்பி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அவரை பின் தொடர்ந்து போலீசார் துரத்திய நிலையில், இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்ப முயன்றுள்ளார். இந்த சேஸிங் காட்சி சினிமாவுக்கே சவால் அளிக்கும் வகையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை என்கவுன்டர் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரில் 5 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள், ஒருவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மற்ற 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications