நண்பன் ஒருவன் வந்த பிறகு.. விண்ணை தொடலாம் உந்தன் சிறகு! வந்த வழியை மறக்காத அமைச்சர் சி.வி.கணேசன்!
கடலூர்: தனது ஆரம்பக்கால நண்பனை கண்டதும் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி பழைய நினைவுகளை அசைபோட்டு நெகிழ்ந்துள்ளார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமம் தான் அமைச்சர் சி.வி.கணேசனுக்கு சொந்த ஊர். பூர்வீகமாக விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுவண்டியில் கொத்தமல்லி, வரகு உள்ளிட்ட விளை பயிர்களை சந்தைக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வந்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசனோடு அவருடைய நண்பன் கருப்பனும் கூடவே உதவிக்காக அவருடன் மாட்டுவண்டியில் செல்வது வழக்கமாம்.

அதுமட்டுமல்ல அந்தக் காலக்கட்டத்தில் சி.வி.கணேசனோடு எல்லா சூழல்களிலும் உடனிருந்தவர் கருப்பன். இந்நிலையில் சி.வி.கணேசன் அரசியல், கட்சி, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்றான பிறகு அவரை சந்திப்பதை கருப்பன் குறைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு விசிட் அடித்த அமைச்சர் சி.வி.கணேசன், ஒரு இடத்தில் தனது பழைய நண்பன் கருப்பனை கண்டிருக்கிறார்.
இதையடுத்து காரை நிறுத்தச் சொல்லி இறங்கி, கருப்பனை அழைத்து ஏன் தன்னை வந்து பார்ப்பதில்லை என்றும் என்ன உதவி வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். உன்னை பார்த்ததே சந்தோஷம் வேறு எதுவும் வேண்டாம் எனக் கூறிய கருப்பனிடம், கைச் செலவுக்கு பணத்தை கொடுத்த அமைச்சர் சி.வி.கணேசன் ஆரம்பக்காலங்களில் எப்படி கஷ்டப்பட்டோம், மாட்டு வண்டியில் சந்தைக்கு சென்றோம் என்பது பற்றியெல்லாம் பழைய நினைவுகளை அசைபோட்டிருக்கிறார்.
பணம், பதவி வரும் போகும் பழசை மறக்கமாட்டேன் என்றும் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து நீ பார்க்கலாம் என்றும் என்ன உதவி தேவைப்பட்டாலும் அழைக்கலாம் எனவும் கருப்பனிடன் சொல்லிவிட்டு கார் ஏறியிருக்கிறார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன். இதைப்பார்த்த கருப்பனின் குடும்பத்தினர் குசேலன் திரைப்பட பாணியில் நெகிழ்ந்துவிட்டனர்.
இதனிடையே இந்தச் சந்திப்பின் போது அமைச்சருடன் சென்ற அவரது உதவியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் சற்று தள்ளி நின்றபடியே இந்தச் சந்திப்பை பார்த்தனர்.












Click it and Unblock the Notifications