தாம்பத்ய உறவே நடக்கலை! பர்ஸ்ட் நைட்டில் கூட வீடியோ காலில் காதலனுடன்..! கடலூர் கணவர் பகீர்
கடலூர்: திருமணமான 25 ஆவது நாளில் கணவருக்கு மனைவியே கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் சுந்தரமூர்த்தியின் மகன் கலையரசன். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.

ஆனால் இந்த திருமணத்தில் சீதாவுக்கு விருப்பமில்லை. பெற்றோர் வற்புறுத்தியதால்தான் அவர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார் போல! இவர் திருமணத்திற்கு முன்பு ஏற்கெனவே ஒருவரை காதலித்து வந்ததும் தெரியவந்தது.
திருமணம் முடிந்து கலையரசனுடன் முதலிரவுக்கு சென்ற போது காதலனுடன் வீடியோ கால் போட்டு சீதா பேசியதாக தெரிகிறது. இதனால் கலையரசன் அதிர்ச்சி அடைந்து சீதாவுக்கு புத்திமதி சொல்லி அனுப்புமாறு அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
பிறகு அந்த பெண்ணின் உறவினர்கள், எல்லாம் சரியாகிவிடும் என கூறி சீதாவை மீண்டும் கணவர் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் காதலனின் நினைவாகவே இருந்த சீதா, கடந்த 20ஆம் தேதி கலையரசனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கலையரசன் புதுவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சீதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலையரசனின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்த கலையரசனின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்தபடியே கூறியிருப்பதாவது: ஜனவரி 26ஆம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. ஜனவரி 25 ஆம் தேதி அந்த மணப்பெண் விஷம் குடித்துவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த நாங்கள் என்னவென கேட்ட போது, "அப்பாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை" என மழுப்பினர். இதையடுத்து எனக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முதலிரவின் போது ஒரு பையனிடம் வீடியோ காலில் அந்த பெண் பேசிக் கொண்டிருந்தார்.
உடனே நான், அது யார் என கேட்டேன். அது யாருமில்லை என மழுப்பிவிட்டு போனை கட் செய்துவிட்டார். அதற்கு அடுத்த நாளும் இரவு 2 மணி வரை யாரோ ஒரு பையனிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அவருடைய சித்தப்பா, மாமா உள்ளிட்டோரிடம் போய் சொன்னேன்.
பிறகு நான் வீட்டிற்கு வந்ததும் அந்த பெண்ணிடம் நான் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. உடனே அந்த பெண்ணின் சித்தப்பாவும் மாமாவும், அந்த பெண்ணை அழைத்து புத்திமதி சொல்லி, இனி அந்த பையனுடன் பேசாதே என தெரிவித்தனர்.
அன்று முதல் என்னிடம் அந்த பெண் பேசவே இல்லை. எங்களுக்குள் தாம்பத்ய உறவும் நடக்கவில்லை. அதை அந்த பெண் நடக்கவிடவில்லை. இந்த 26 நாளில் அந்த பெண், அந்த பையனுடன் போன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த நான் கோபமடைந்து ஏன் இது போல் செய்கிறாய் என கேட்டேன்.
அதற்கு அந்த பெண், நான் யாருடன் வேண்டுமானாலும் போன் பேசுவேன். இதை நீ கேட்கக் கூடாது என கூறினார். இதையடுத்து பெண்ணின் உறவினர்களை வைத்து இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து நடந்தது. இதனிடையே எனக்கு பெண் மீது சந்தேகமாக இருப்பதால் அவருடைய தாய் வீட்டிற்கு கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிட்டேன். இதனால் பஞ்சாயத்தில் "பெண்ணை ஏன் தாய் வீட்டில் விட்டு வந்தாய், தாலி கட்டியதால் நீ தான் அந்த பெண்ணை வைத்து வாழ வேண்டும்" என்றார்கள்.
அதற்கு நான், "பெண்ணின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை, என்னை ஏமாற்றுகிறார், அதனால் அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்" என்றேன். இதையடுத்து அவர்கள் அதெல்லாம் முடியாது என கூறி பஞ்யாயத்து செய்து பெண்ணுடன் என்னை வாழ வைத்தார்கள்.
அப்போது என் தம்பியும் அப்பாவும் காவல் நிலையத்தில் இருந்து போன் போட்டார்கள். உடனே பஞ்சாயத்து செய்த அந்த பெண்ணின் உறவினர்கள் என் கழுத்தில் கத்தியை வைத்து என்னை மிரட்டினார்கள். போலீஸ் ஸ்டேஷன் போனால் கொன்றுவிடுவோம் என்றார்கள். உடனே நானும், என் தம்பியிடம் ஒன்றும் பிரச்சினை இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டேன்.
இதையடுத்து பெண்ணை அவருடைய தாய் வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தேன். என்னிடம் அந்த பெண் சரியாக பேசவில்லை. உடனே அந்த பெண்ணின் சித்தப்பா அவருக்கு போன் செய்து, "மாப்பிள்ளைக்கு எல்லாமே தெரிந்துவிட்டது, அவரை உயிருடன் விட்டால் உன்னை கொன்றுவிடுவான்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நான் இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு போன போது, அசதியாக இருந்ததால் பால் கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு அந்த பெண், பால் இல்லை, கூல்டிரிங்ஸ் இருக்கிறது என கூறி கொடுத்தார். நான் அந்த குளிர்பானத்தை குடித்த போது கசப்பாக இருந்தது. அதை கேட்ட போது சீதா சமாளித்துவிட்டார்.
இதையடுத்து சீதாவும் போய் தூங்கிவிட்டார். நானும் படுத்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து , என்னை சீதா எழுப்பி, "நான் குளிர்பானத்தில் விஷம் கலந்து விட்டேன். என் மாமா, சித்தப்பா ஆகியோர் சொல்லித்தான் இப்படி செய்தேன். என்னை பற்றி எல்லா விஷயமும் உனக்கு தெரிந்து விட்டது. உன்னை கொன்றால்தான் நான் என் காதலனுடன் சந்தோஷமாக வாழ முடியும். அதனால் கூல்டிரிங்ஸில் மருந்து வைத்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ செத்து போயிடுவ" என அந்த பெண் சொன்னதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
உடனே அந்த பெண்ணின் உறவினர்களிடம் இதை சொன்னேன். அப்போது அவர்கள் என்னை குள்ளஞ்சாவடியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள். அங்கு நான் பிழைக்க மாட்டேன் என சொல்லிவிட்டதால், என்னை புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினார்கள்.
என்னை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு போய்விட்டார்கள். என்னை என் தம்பி, அவருடைய மனைவி, என் அப்பா, அம்மா, என் தங்கை, என் தங்கை கணவர் உள்ளிட்டோர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனது இந்த நிலைக்கு முழு காரணம் என் மனைவியும் அவரை சேர்ந்தவர்களும்தான்! இவ்வாறு கலையரசன் வாக்குமூலம் அளித்தார்.












Click it and Unblock the Notifications