நேற்று கடலூர்.. இன்று அரக்கோணம்! பட்டப்பகலில் பட்டா கத்தியுடன் சுற்றிய நபர்.. பதறி ஓடிய மக்கள்! ஷாக்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றிய கஞ்சா போதை நபரால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வந்தால் வெட்டி விடுவேன்.. ஓடிப்போ.. என கத்திக் கூச்சலிட்டப்படி அங்கும் இங்குமாக தெருவில் உலாவிக் கொண்டிருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
தமிழகத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் செய்யும் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பொது இடங்களில் கூட மக்கள் நிம்மதியாக சென்று வரமுடிவதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் தட்டிக்கேட்க சென்றாலும், அவர்கள் மீது கஞ்சா போதையில் இருக்கும் நபர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துவிடுகின்றன.

வந்தால் வெட்டி விடுவேன்.. ஓடிப்போ
போலீசார் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறாதவாறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை. நேற்று முன் தினம் தான் கடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுனர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் நோக்கில் ஒரு கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டு வந்தது.
கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்களை சினிமா பாணியில் சேசிங் செய்து நேற்று 6 பேரை கைது செய்திருந்தனர். இதில் 36க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விஜய்யை என்கவுண்டர் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றிய கஞ்சா போதை நபரால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன்ஹால் நான்காவது தெருவில், கஞ்சா போதையில் தள்ளாடியபடி கையில் பட்டாக் கத்தியுடன் ஒருவர் சுற்றித் திரிந்தார். சாலையில் வரும் மக்களை மிரட்டியபடி இங்கே ஏன் வருகிறாய்.. வந்தால் வெட்டி விடுவேன்.. ஓடிப்போ.. என கத்திக் கூச்சலிட்டப்படி அங்கும் இங்குமாக தெருவில் உலாவிக் கொண்டிருந்தார்.
கஞ்சா போதையில் அலப்பறை
மேலும் அவ்வழியாக செல்வோரை கத்தியை காட்டி மிரட்டியதால், மக்கள் பதற்றமடைந்து ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக இது பற்றி அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் நகர போலீசார் பட்டாக்கத்தியுடன் வலம் வந்த நபரை நைசாக பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், கஞ்சா போதையில் அலப்பறை செய்த நபர் பட்டிமோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரக்கோணம் பகுதியில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பட்டப்பகலில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கஞ்சா போதை நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பல்லடம் பேருந்து நிலையத்திலும் கூத்து
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பச்சாப்பளையம் பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி. இவர் பல்லடம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல் பல்லடம் பேருந்து நிலையத்தில் கழிவறை அருகே சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அராஜகம் செய்ததோடு தாக்கினர்.
கஞ்சா போதையில் இருவரும் அவரை அடித்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பயணிகள் மொத்தமாக கூடி, கஞ்சா போதை இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசிடம் பிடித்து கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அழைத்தும் வராததால் அவர்கள் இருவரையும் போலீசார் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரவுடி விஜய் என்கவுண்டர்
புதுச்சேரி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் எம்.புதூர் பகுதியில் லாரி உள்ளிட்ட வாகனங்களை வழி மறித்து 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் தான் புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற லாரியை மறித்த கும்பல், லாரி ஓட்டுநர் காளிமுத்துவை அரிவாளால் தாக்கி செல்ஃபோன் மற்றும் பணத்தை பறித்துள்ளது.
இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், பிரபல ரவுடியான மொட்டை விஜய் உள்ளிட்ட 6 பேர் தான் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பைக்கில் தப்பி செல்ல முயன்ற அவர்கள் போலீசார் சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்த வீடியோ காட்சிகள் கூட இணையத்தில் வெளியாகி இருந்தது. பைக்கில் 3 பேர் மின்னல் வேகத்தில் சென்ற நிலையில், அவர்களை போலீசார் விரட்டி பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications