பானை..கலர் கோலப்பொடி..செங்கரும்பு..இஞ்சி..மஞ்சள் கொத்து..களை கட்டும் பொங்கல் பொருட்கள் விற்பனை
கடலூர்: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் பண்டிகைகால பொருட்கள் விற்பனை களைக்கட்ட தொடங்கி இருக்கிறது. இஞ்சி கொத்து, கலர் கோலப்பொடிகள், மாடுகளை அலங்கரிக்கும் பொருட்களும் சந்தைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளன. பொங்கல் பண்டிகைக்கான மஞ்சள் கொத்துகள் அறுவடை முடிந்து விற்பனைக்காக வந்து குவிந்துள்ளது. மண்பானைகளும் அதிகளவில் விற்பனைக்காக வந்துள்ளதால் சந்தைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக பொங்கல் திருவிழா உள்ளது.
பொங்கல் பண்டிகையன்று பொதுமக்கள் புத்தாடை அணிந்து, புது பானையில் பச்சரிசி இட்டு, அதில் மஞ்சள் கட்டி பொங்கலிட்டு சூரியனை வணங்குவர். இதற்காக பொங்கல் பொருட்கள் விற்பனை கடலூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் உழவர் சந்தையில் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கரும்புகள், மஞ்சள், வாழைப்பழம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஒரு ஜோடி கரும்பு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. பொங்கல் பானைகள் ஒரு ஜோடி 150 முதல் விற்பனை செய்யப்பட்டது. மேலும் அவற்றின் வண்ணத்திற்கு ஏற்ப விலைகள் மாறுபட்டன. இதே போல மஞ்சள் கொத்தும் ரூ 20 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதனால் கடலூரில் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல சாம்பார் வைக்க தேவையான கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு, மொச்சைக்காய் ஆகியவற்றை பொதுமக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிச் சென்றனர்.
நெய்வேலி அருகே சென்னை- கும்பகோணம் சாலையில் வடக்குத்தில் மண்பானைகள், மண் அடுப்புகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களும் வாங்கி செல்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், ராமநத்தம் பகுதியில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சள் ஈரோடு 1, எருமதலி மற்றும் நாட்டு ரக செடிகளை சாகுபடி செய்திருந்தனர். மஞ்சள் செடிகளை வாரச்சந்தை மூலம் மஞ்சள் கொத்துகளாக விற்றும், மிஞ்சிய மஞ்சள் கிழங்குகளை பதப்படுத்தி ஈரோடு மார்க்கெட்டிலும் விற்று விவசாயிகள் வருவாய் ஈட்டுகின்றனர். புதிதுபுதிதாக முளைத்த கடைகள் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மஞ்சள் கொத்து அறுவடை தொடங்கி சந்தைக்கு விற்பனைக்கு வர தொடங்கி இருக்கிறது. அதன்படி ராமநத்தம் பகுதி மற்றும் அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடு, பெரும்புத்தூர், நல்லூர் ஆகிய பகுதியில் அறுவடை செய்யப்படும் மஞ்சள் ராமநத்தம் கடைவீதிக்கு விற்பனைக்காக வந்து கொண்டிருக்கிறது.
சிறு சிறு கடைகள் முளைத்துள்ளன சாலையில் எங்கும் மஞ்சள் கொத்துகளும், கரும்புகள், தேங்காய்கள், பழங்களுமாக நிரம்பி இருக்கிறது. சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் இங்கு வந்து செல்கிறார்கள். ஒரு மஞ்சள் கொத்து ரூ.25 முதல் 30 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல கடலூரில் உள்ள பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இங்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக கடலூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. குண்டு மல்லி பூ கிலோ 2000 ரூபாய்க்கும், முல்லை அரும்பு கிலோ 2000 ரூபாய்க்கும், காக்கட்டான் 1200 ரூபாய்க்கும், ரோஜா பூ 240 ரூபாய், சாமந்தி 200 ரூபாய், கேந்தி 80 ரூபாய்க்கும், கோழி கொண்டை பூ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் இந்த விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்களும் வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கிச் சென்றனர். மொத்தத்தில் கடலூரில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.
பொய்கை வாரச்சந்தையில் ஒரு கோடிவரை மாடு விற்பனையாகிறது. அடுத்த வாரம் 17 ம் தேதி காணும் பொங்கல் என்பதால் 14 ஆம் தேதி சனிக்கிழமையும் சந்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் அடுத்த பொய்கை பகுதியில் வாரம் ஒரு நாள் நடைபெறும் பிரபலமான பொய்கை வார சந்தை நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டம் மற்றும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்காக வந்திருந்தது பொங்கல் பண்டிகையை ஒட்டி மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தற்போதைய நிலவரப்படி ஒரு கோடி வரை மாடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கலையொட்டி மாடு அலங்கார பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் மாட்டு உரிமையாளர்கள். அடுத்த வாரம் 17ஆம் தேதி செவ்வாய் கிழமை காணும் பொங்கல் வருவதால் அதற்க்கு முன்னதாக 14 சனிக்கிழமை சந்தை நடைபெறும் என சந்தை நடத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.