கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி.. 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி! குளிக்க சென்ற போது விபரீதம்
கடலூர்: கடலூர் கெடிலம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் குச்சிபாளையம் அருகாமையில் கெடிலம் நதிக்கரையில் உள்ளது. இப்பகுதி மக்கள் இந்த ஆற்றில் குளிப்பது வழக்கம்.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதுபோலத் தான் இன்று அங்குள்ள சிலர் கெடிலம் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கினர்
இங்குக் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் 8 பேர் குளிக்கச் சென்றுள்ளனர். அதில் ஏழு பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கிக் குளித்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவர்களில் சிலர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டனர். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீரில் மூழ்கியவர்களை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

7 பேர் பலி
அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 சிறுமிகள், 3 பெண்கள் என மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் சுமந்தா (18), பிரியா (18), நவநீதா (18), சங்கீதா (16), மோனிஷா (16), திவ்யதர்ஷினி (10), பிரியதர்ஷினி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை
கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில் இவர்கள் நீரில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நடுவீரப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் என ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் அஞ்சலி
உயிரிழந்தோரின் உடல்கள் இப்போது கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

நிவாரணம் அறிவிப்பு
இந்நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்தத் துயர சம்பவத்தைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்த குடும்பத்துக்குத் தலா ரூ 5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications