டெல்லி வைத்த புள்ளி.. கோலம் போட்ட அண்ணாமலை! வசமாக சிக்கிய "கருப்பு - சிவப்பு மீன்கள்"! அதிரும் திமுக
கடலூர்: நாளை நடக்க உள்ள பாஜக போராட்டத்தில் முக்கியமான சில திமுக புள்ளிகள் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுக்க நாளை பாஜக சார்பாக தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. பாஜக சார்பாக மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
கடலூரில் தலைமை தபால் நிலையம் எதிரே மிகப்பெரிய அளவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ள இருக்கிறார். தமிழுக்கு எதிராக திமுக செயல்படுகிறது.

கடலூர் போராட்டம்
இதில் கடலூர் போராட்டம் மிகப்பெரிய அளவில் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில்தான் இந்த போராட்டத்தில் திமுகவை சேர்ந்த முக்கியமான தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் சமீபத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் தொடங்கி அனைத்து பதவிக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் உட்கட்சி தேர்தலில் சில முக்கியமான நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதிருப்தி
வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் ஒரு சில நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முடிவில்தான் பாஜக இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடலூரில் நடக்கும் இந்த கூட்டத்தில் திமுகவில் அதிருப்தியில் உள்ள பலர் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவை சேர்ந்த, வடலூரைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலு பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் உட்பட 50க்கும் மேற்பட்ட உள்ளூர் நிர்வாகிகள் திமுகவில் இணைய போவதாக கூறப்படுகிறது.

அமைச்சர்
இது போக வேறு ஒரு முக்கியமான நிர்வாகி அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைய உள்ளார். அவரின் தலைமையில் சில திமுக கவுன்சிலர்களும் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கடலூருக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபேலா வந்தார். அப்போது இவர் பாஜக நிர்வாகிகளிடம், திமுக நிர்வாகிகளை இழுப்பது பற்றி பேசி உள்ளார். திமுகவில் உள்ளவர்களை தூக்க வேண்டும் என்று அவர் புள்ளி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

திமுக நிர்வாகிகள்
அவர் போட்ட புள்ளியில்தான் தற்போது பாஜகவினர் கோலம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான திமுக தலைகள் நாளை அணி மாற போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வாரம் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹிந்தி மொழி குறித்த அமைச்சர் அமித் ஷா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து இந்த தீர்மானத்தை தமிழ்நாடு நிறைவேற்றியது. இந்த நிலையில்தான் தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இணைப்பு
இதில்தான் முக்கியமான சில திமுக தலைகள் பாஜகவில் இணைய உள்ளனர். தமிழ்நாட்டை நோக்கி மத்திய அமைச்சர்கள் படை எடுக்க உள்ளனர். மத்திய அரசின் நலத் திட்டம் மக்களுக்கு செல்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக 30 நாட்களில் 76 அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த அமைச்சர்களின் வருகையின் போது திமுகவை சமாளிப்பது, திமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது திமுக நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications