பில்லி சூனியம்.. திமுகவிற்கு ஓட்டு போடாவிட்டால் வயிறு வலிக்கும் - அச்சுறுத்தும் திமுக வேட்பாளர்
கடலூர் தொகுதி மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்துள்ளோம் திமுகவுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று திமுக வேட்பாளர் ஐயப்பன் கூறியுள்ளார்.
கடலூர்: கேரளாவிலிருந்து மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்திருக்கிறேன். யாராவது எதிர் தரப்பில் பணம், பொருள் வாங்கி விட்டு, திமுகவிற்கு ஓட்டுப் போடாமல் சென்றால் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்படும் என்று கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐயப்பன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களிடம் விதம் விதமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். கையெடுத்து கும்பிட்டும், காலில் விழுந்தும் பல பகுதிகளில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.
டீ கடைகளில் டீ போட்டுக்கொடுத்தும், ஹோட்டல்களில் பிரியாணி சமைத்து கொடுத்தும், சில வேட்பாளர்கள் தோசை சுட்டுக்கொடுத்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சத்தியமா ஓட்டு போடுங்க
சில வேட்பாளர்களோ மாரியம்மா சத்தியமாக எனக்கு ஓட்டு போடுவீங்களா?என்று கேட்டு வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிக் கொள்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் கூட சத்தியமாக திமுக ஓட்டு போடுவீர்களா என்று கேட்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
ஐயப்பன் வாக்கு சேகரிப்பு
கடலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் போட்டியிடுகிறார். சுத்துகுளம் பகுதியில் நேற்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய ஐயப்பன் தேர்தலுக்காக சிலர் வழங்கும் பணத்தையோ அல்லது பொருளையோ விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.
மந்திரவாதிகள் சூனியம்
வாங்கும் பணத்தை 6ஆம் தேதி வரையில் செலவு செய்து விடாதீர்கள். ஏனெனில், கேரளாவிலிருந்து மந்திரவாதிகளை வரவழைத்துள்ளோம். 2 நாளில் வந்து விடுவார்கள். அவர்கள் மூலமாக சூனியம் வைத்திருக்கிறேன்.
ஓட்டு போடாவிட்டால் வயிறு வலிக்கும்
யாராவது எதிர் தரப்பில் பணம், பொருள் வாங்கி விட்டு, திமுகவிற்கு ஓட்டுப் போடாமல் சென்றால் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்படும். அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்கு சேகரித்தார்.
இது லிஸ்ட்லயே இல்லையே
வாக்கு சேகரிப்பதற்கு பல ரகம் இருந்தாலும் இது புதுசா இருக்கே என்று யோசிக்கின்றனர் பல வேட்பாளர்கள். எல்லா வாக்குகளும் தனக்கே விழ வேண்டும் என்று சிலர் மாந்ரீகம் செய்வார்கள். ஆனால் தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு வயிறு வலிக்க வேண்டும் என்று சூனியம் வைப்பது புது விதமாக இருக்கிறதே என்று கடலூர் பகுதிகளில் பேசிக்கொள்கின்றனர்.