ஒரு பக்கம் பினராயி உடன் மீட்டிங்.. இன்னொரு பக்கம் பெ.சண்முகம் மீது FIR.. சிபிஎம் ஷாக்!
கடலூர்: விளை நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் உத்தரவுக்கு எதிராக நேற்று கடலூர் மலையடி குப்பத்தில் முந்திரி கன்று நடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தியிருந்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் உட்பட 132 நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
இன்று கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனுடன் தமிழக அரசு முக்கிய சந்திப்பை நடத்தியிருந்த வேளையில், மறுபுறும் சிபிஎம் மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது தோழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வெள்ளைக்கரை ஊராட்சியில் மலையடி குப்பம் வெ.பெத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம், கட்டாரச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் 5 தலைமுறைகளாக 155 குடும்பங்கள் 164 ஏக்கரில் விவசாயம் செய்து வந்திருக்கிறது. இந்த நிலம் அரசு தரிசு நிலமாகும். சும்மா கிடந்த நிலத்தை எடுத்து, அதை பதப்படுத்தி உழுது இன்று வேளாண் நிலமாக விவசாயிகள் மாற்றியிருக்கிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகம் திடீரென ஒரு உத்தரவை கொடுத்து, நிலத்திலிருந்து எல்லோரையும் வெளியேற சொல்லியிருக்கிறது.
சொன்னது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்காக அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 9000 முந்திரி மரங்களை மாவட்ட நிர்வாகம் பிடுங்கி எறிந்திருக்கிறது. நிலப்பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும் மரங்களை அழிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு யார் அனுமதி கொடுத்தது? இத்தனை காலம் பாடுபட்ட விவசாயிகளுக்கு என்ன பயன்? என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேள்வி எழுப்பியது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே மரங்கள் பிடுங்கி எறியப்பட்ட இடத்தில் முந்திரி கன்று நடும் போராட்டத்தை விவசாயிகள் சங்கமும், கட்சியும் முன்னெடுத்திருக்கிறது. நேற்று நடந்த இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர். இருப்பினும் அனுமதியை மீறி போராட்டம் நடந்திருக்கிறது. எனவே, பெ.சண்முகம் உட்பட போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த நடவடிக்கையின்போது தள்ளு முள்ளும் ஏற்பட்டிருக்கிறது.
சம்பவம் குறித்த விவசாய சங்கத்தினர் கூறுகையில், "காலம் காலமாக பயன்படுத்தி வரும் நிலத்திலிருந்து எங்களை மாவட்ட நிர்வாகம் பிடுங்க பார்க்கிறது. எனவே, நாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம் முந்திரி மரங்களை வெட்ட தடை விதித்தது. அதே நேரம், சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், இந்த அறிக்கையில் விவசாயிகள் மாற்று கருத்து கொண்டிருந்தால் அவர்கள் மேல் முறையீடு செய்ய 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் இதுவரை விசாரணையே செய்யவில்லை. அதற்கு பதிலாக எங்களை இந்த நிலத்திலிருந்து அப்புறப்படுத்தவே திட்டமிட்டு வருகிறார். 9000 முந்திரி மரங்களுக்கு ரூ.1 லட்சம் என்கிற விகிதத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டுமென வலியுறத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications