"நான் எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது".. சாதி சண்டையை விடுங்க.. வேல்முருகன் கண்ணீர்.. உருக்கம்
பண்ருட்டி: நான் 30 வருஷமா எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது.. இந்த சண்டையை தூக்கி போட்டுட்டு எல்லாம் சேர்ந்து முன்னேறுங்க என்று உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடுகிறார். பாமகவில் எம்எல்ஏவாக இருந்த வேல்முருகனுக்கு வன்னியர்கள் இடையே பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது. அதே சமயம் திமுக கூட்டணியில் உள்ள விசிக திருமாவளவனும் வேல்முருகனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
நேற்று முதல்நாள் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் தோன்றி பண்ருட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டனர் . வடதமிழகத்தில் பாமகவிற்கு எதிராக வேல்முருகன் திமுகவின் முக்கியமான "டிரம்ப் கார்ட்டாக" பார்க்கப்படுகிறார்.

வாக்கு
வன்னியர் வாக்கு, தலித் மக்கள் வாக்கு இரண்டையும் கவர கூடிய ஒருவராக வேல்முருகன் பார்க்கப்படுகிறார். இரண்டு தரப்பும் இவருக்கு தேர்தல் நேரத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பண்ருட்டி தொகுதியில் பேசிய வேல்முருகன், தலித் மக்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் புகழ்ந்தார். பேசிக்கொண்டு இருக்கும்போதே உருக்கமாகி கண்ணீர்விட்டார்.

வேல்முருகன்
வேல்முருகன் தனது பேச்சில், பாமகவில் இருந்த போது நான் சிறுத்தையும், சிங்கமுமாக சண்டை போட்டுகொண்டு இருந்தேன். பாமகவில் நம்பர் 2வாக இருந்தேன். 30 வருடம் பாமகவில் உழைத்தேன். ஆனால் அதை எல்லாம் நினைத்து பார்க்காமல் பாமகவே என்னை இப்போது அழிக்க பார்க்கிறது. என்னை வளர விடாமல் தடுக்க பார்க்கிறது.

30 வருஷம்
30 வருடம் என்னை எதிரியாக பார்த்த விடுதலை சிறுத்தைகள்தான் இப்போது என் கூட இருக்கிறார்கள். சிறுத்தைகள்தான் என்னை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். வன்னியர்களே சிந்தியுங்கள்.. ஜாதி கடந்து நாம் இணைய வேண்டும். உங்களுக்காக சண்டை போட்டு, கோர்ட், கேஸ் என்று அலைந்தேன். யாருக்கு எதிராக சண்டை போட்டேனோ அவர்கள்தான் எனக்காக இப்போது தேர்தல் வேலைகளை பார்க்கிறார்கள்.
நமக்குள்ள சாதிச் சண்டை வேண்டாம், பேசி தீர்த்துக்குவோம். படிங்க, வேலைக்கு போங்க, தொழில் தொடங்குங்க, முன்னேறுங்க - Velmurugan 🔥 pic.twitter.com/qE3KXR2QUt
— Vote for D.M.K 🖤❤️ (@Piliral) April 1, 2021
2 கிமீ தூரம்
2 கிமீ தூரத்திற்கு மாலை தூவி என்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் வரவேற்றனர். கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, பாசமாக வரவேற்பு கொடுக்கிறார்கள். எனக்கு கண்களில் நீர் வந்தது.. விடுதலை சிறுத்தைகள் கொடுத்த வரவேற்பை பார்த்து கலங்கி போனேன்.

சொந்த சாதி
சொந்த சாதிக்காக வேலை செய்து, இவர்களை எதிர்த்தேன். ஆனால் இவர்கள்தான் இப்போது எனக்காக தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். 30 ஆண்டுகாலமாக இவர்களை எதிர்த்தேன். 30 வருஷமாக ஜாதி சண்டை போட்டோம். இனிமேல் ஜாதி சண்டை வேண்டாம்.

படிப்போம்
எல்லோரும் படிப்போம். முன்னேறுவோம். வேலைக்கு போவோம். சண்டையை மறப்போம். பிரச்சனை வந்தால் பேசி தீர்ப்போம், வன்னியர்களும் , தலித் மக்களும் ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம் இது. முன்னேறுவோம், என்று வேல்முருகன் மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார். தலித், வன்னியர் மோதலை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வேல்முருகன் விடுத்த கோரிக்கை சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications