தமிமுன் அன்சாரியை தடுத்து நிறுத்திய டி.எஸ்.பி.! காவல்துறையினருடன் மஜகவினர் கடும் வாக்குவாதம்!
கடலூர்: என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியை டி.எஸ்.பி. தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
என்.எல்.சி.நடவடிக்கைகளுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பெரும் எதிர்ப்புகளை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் வயல்களில் விளைந்த பயிர்களை இயந்திரங்களை கொண்டு NLC நிர்வாகம் அழித்தது கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

NLC வரம்பு மீறல்களுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையிலான குழு சேத்தியாதோப்பு சென்றது.
அந்தக் குழுவில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். இதனிடையே அவர்கள் அனைவரும் முக்கூட்டு சாலை அருகே சென்றபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களுடன் அடுத்தடுத்து கார்களில் வந்த மஜகவினரும் தடுக்கப்பட்டனர். டி.எஸ்.பி.தலைமையில் நூற்றுக்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டு தடுப்பு வேலி அமைத்து உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதையடுத்து அங்கு காவல்துறையினருக்கும், தமிமுன் அன்சாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க விடாமல் தடுப்பது ஏன்? என தமிமுன் அன்சாரி ஆவேசம் காட்டியதோடு நூற்றுக்கணக்கானோரை சந்திக்க விடவில்லை என்றாலும் பரவாயில்லை, ஐந்து பேர் கொண்ட குழுவையாவது அனுமதிக்க வேண்டும் என்றார்.
அதையும் காவல்துறை மறுத்ததால், மஜக நிர்வாகிகள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும், என்.எல்.சி.க்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications