கடலூர் சர்க்கரை ஆலை.. வரும் 15 ஆம் தேதி முதல் செயல்படுமென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை வரும் 15 ஆம் தேதி முதல் வழக்கம்போல் இயங்குமென மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டுமென பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த ஊரடங்கு உத்தரவால் தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், உரம், சர்க்கரை ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், வார்ப்படத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 13 ஆலைகள் இயங்கலாம் என தமிழக அரசு கடந்த செவ்வாய்கிழமை அனுமதி அளித்திருந்தது.
ஆனால், அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே தமிழக அரசு இந்த உத்தரவை ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை வரும் 15 ஆம் தேதி புதன்கிழமை முதல் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களைக் காக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு, குறிப்பாக விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மணிலா மற்றும் உளுந்து, நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த விளைபொருட்களை விவசாயிகள் உரிய காலத்தில் விற்பனை செய்யும் வண்ணம் கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை துறையின் கீழ் செயல்படும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் விவசாயிகளின் நலன் கருதி வரும் 15.04.2020 முதல் செயல்பட துவங்கும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
எனவே விவசாயிகள் சமூக நலன் கருதி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய வரும்போது அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றியும், பொது இடைவெளியைக் கடைபிடித்தும் வணிகம் மேற்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் நெல்லிக்குப்பத்திலுள்ள ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி வரும் 15.04.2020 முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே கரும்பு விவசாயிகள் கரும்பு வெட்டும்போதும், அதனை ஆலைக்கு எடுத்து வரும்போதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சர்க்கரை ஆலையினர் மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளித்து நல்ல முறையில் கரும்பு அரவை மேற்கொண்டு பயன்பெறவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த செவ்வாய்கிழமை சர்க்கரை ஆலைகளை இயக்க அனுமதி அளித்து, பின்பு ரத்து செய்த நிலையில், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சர்க்கரை ஆலை இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.