அண்ணன்னு விஜய் சொன்னாரே? வீர வசனம் முதலமைச்சர் எங்கே? சூலூர் கேஸில் விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்
சென்னை: குழந்தைகள், பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜயின் வீர வசனம் என்ன ஆனது? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்? என டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப் போட்டிருக்கிறது.

முதலமைச்சர் விஜய் எங்கே
இந்த வழக்கில் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அண்ணனாகவும் அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என வாக்குறுதி அளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் இத்தகைய குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. அதில், தமிழக அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடக்கூடாது.. அதற்குப் பதிலாக நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரம் காட்ட வேண்டும்.. இந்த அரசு வெறும் ரீல்ஸ் அரசாகச் செயல்படாமல் ரியல் அரசாக மாறி களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்..
உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
அதேபோல உதயநிதி ஸ்டாலின் இந்த அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசியதாவது, புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் மற்றும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் என 30க்கும் மேற்பட்ட பெரும் குற்றங்கள் நடந்துள்ளன..
இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டது.. இனி ஒரு சம்பவம் கூட இதுபோல நடைபெறாமல் இருக்க முதலமைச்சர் சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சூலூர் - டிடிவி தினகரன் நறுக்
இந்த வரிசையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.. அவர் தனது பதிவில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.. குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும் அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்பு பேசிய வீர வசனங்கள் என்ன ஆனது எனத் தெரியவில்லை.
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மரக்காணத்தில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது..
அண்ணன்னு விஜய் சொன்னாரே
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்டபோது கொதித்தெழுந்த முதலமைச்சர் விஜய் இப்போது ஏன் மௌனம் காக்கிறார்.. சிறுமியைப் பாதித்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தருவதோடு தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் அவர் செலுத்த வேண்டும் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்..
எதிர்க்கட்சிகளின் இந்தத் தொடர் விமர்சனங்கள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்த அரசு இனி வரும் காலங்களிலாவது அதற்கான நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது....!!












Click it and Unblock the Notifications