பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி!
டெல்லி: கடந்த சில வாரங்களாக நாடெங்கும் உள்ள மருத்துவக் கனவுகளோடு இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் உலுக்கி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை உச்ச நீதிமன்றம் இப்போது விசாரிக்கிறது. இந்த விவகாரத்தில் சில கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவைப் பிறப்பித்துள்ளது..
கடந்த மே 3ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இருப்பினும், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல் வந்த நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளில் முன்கூட்டியே வினாத்தாள்கள் வெளியாகி இருந்தது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

பாடம் கற்கவில்லை
இந்நிலையில், அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் தன்வி துபே உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கடந்த காலங்களில் நடந்த வினாத்தாள் கசிவு சம்பவங்களிலிருந்து எந்தவொரு பாடமும் கற்று கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு இதுவரை என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்துப் பதிலளிக்குமாறு என்டிஏ மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஃபெயிலியர்
என்டிஏ அமைப்பின் தொடர் 'சிஸ்டமிக் ஃபெயிலியர்' காரணமாக, அந்த அமைப்பையே முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் தன்வி துபே மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்டிஏவுக்குப் பதிலாக மிகவும் வலுவான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் சுதந்திரமான ஒரு புதிய தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு சைபர் செக்யூரிட்டி நிபுணர் மற்றும் தடய அறிவியல் விஞ்ஞானி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் கண்காணிப்புக் குழுவை அமைத்து, அதன் நேரடி மேற்பார்வையில் மட்டுமே நீட் மறுதேர்வை நடத்த வேண்டும். வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு, லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படும் 'பிசிகல்' முறையில்தான் கசிவுகள் அதிகமாக நடப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறையை மாற்ற வேண்டும்
இதனைத் தடுக்க இனி வரும் காலங்களில் நீட் தேர்வை பேப்பர்-பேனா முறையில் நடத்தாமல், முற்றிலும் கணினி அடிப்படையிலான தேர்வு முறையாக மாற்ற வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் லாக் செய்து, தேர்வு தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே திறக்கும் உயர்தரப் பாதுகாப்பு முறையைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது இந்த விவகாரத்தில் என்டிஏ மற்றும் மத்திய அரசு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல பகீர் தகவல்கள் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications