திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய அவர்கள், ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர். இதனால் தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகரம் மரகதம் குமராவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். மூன்று பேருமே வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்தனர்.

சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக மூன்று பேரும் வாக்களித்தனர். தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால் விஜய் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்காததால், ஏமாற்றம் அடைந்தனர்.
இதனையடுத்து, எஸ்பி வேலுமணி தரப்பில் இருந்து சில எம்.எல்.ஏக்கள் எடப்பாடி முகாம் திரும்பிய நிலையில், இன்று திடீர் திருப்பமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த கையோடு ஆதவ் அர்ஜுனாவையும் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
சபாநாயகர் ஜேசிடி பிரபகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை மூன்று எம்.எல்.ஏக்களும் அளித்துள்ளனர். மூன்று எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால், தாராபுரம், பெருந்துரை, மதுராந்தகம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட விஜய் ராஜினாமா செய்தார். இதனால், இந்த தொகுதிக்கும் சேர்த்து 4 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
அதிமுக வென்ற மூன்று தொகுதிகளுமே அக்கட்சியின் கோட்டையாக உள்ளது. எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது. மூன்று முனை போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் இன்னும் ஆறு மாதத்திற்குள் நடைபெற சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் பலம் தற்போது 44 ஆக குறைந்துள்ளது.
ராஜினாமா செய்த மூன்று பேருமே தவெகவில் இணைந்து இருப்பதால், இடைத்தேர்தலிலும் தவெக சார்பாக அவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட வாய்ய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் 27 எம்.எல்.ஏக்களும், எஸ்பி வேலுமணி தரப்பில் 17 எம்.எல்.ஏக்களும், விஜய்யின் தவெகவில் 3 எம்.எல்.ஏக்களும் இணைந்துள்ளதால் அதிமுக மூன்றாக உடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications