திடீரென எழுந்த ”நாளைய பிரதமரே” கோஷம்! சட்டென திரும்பி முறைத்த திருமாவளவன்
கடலூர்: விசிக தலைவர் திருமாவளவனை தொண்டர் ஒருவர் நாளைய பிரதமரே என்று கோஷம் எழுப்பிய போது, சட்டென திரும்பி திருமாவளவன் முறைத்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. கடலூரில் தேமுதிக நிர்வாகி ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த போது, இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட முயற்சிக்கும் என்று திருமாவளவன் கூறி இருந்தார். இதனால் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திருமாவளவன் அதிருப்தியில் இருக்கிறார்.

எல்.முருகன் சூசகம்
நிச்சயமாக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறினார். அதுமட்டுமல்லாம, திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. இன்னும் 3 மாதங்களில் பாஜக கூட்டணி விரிவடையும். செப்டம்பர் மாதத்திற்குள் பாஜக கூட்டணி முழுமை பெறும் என்று கூறினார்.
திருமாவளவன் பதிலடி
ஆனால் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணக்கமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், திமுக கூட்டணியில் இருந்து கொண்டே கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முயற்சிப்போம். அதற்காக கூடுதல் தொகுதி என்பதில் பிடிவாதமாக இருக்க மாட்டோம். களம், சூழல் அனைத்தையும் அறிந்து அதற்கேற்ப முடிவு செய்வோம்.
கடலூரில் திருமாவளவன்
திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் வெளியேறாது. அதுதான் பாஜகவிற்கு கவலை அளிக்கிறது என்றும் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் கடலூரில் மாற்று கட்சியினர் விசிகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தேமுதிக நெய்வேலி நகரச் செயலாளர் வைத்தியலிங்கம் விசிகவில் இணைந்து, தனது காரில் விசிக கொடியை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நாளைய பிரதமரே
அதனை ஏற்று விசிக தலைவர் திருமாவளவன் காரில் கொடியை வைத்ததோடு, அவருக்கு சால்வை அணிவித்து கட்சிக்கு வரவேற்றார். அப்போது திருமாவளவனின் பின் நின்ற ஒரு தொண்டர், அண்ணன் எழுச்சி தமிழர்.. அண்ணன் எழுச்சி தமிழர் என்று கோஷம் போட்டார். திடீரென நாளைய பிரதமரே.. நாளைய பிரதமரே என்று கோஷம் எழுப்பினார்.
முறைத்த திருமாவளவன்
அப்போது சால்வை அணிவிக்க சென்ற திருமாவளவன் ஒரு நொடி நின்று சட்டென அந்த தொண்டரை பக்கம் திரும்பி முறைத்தார். இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பலரும் ஜாலியாக பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications