13 ஆயிரம் கட்டுனா..12 லட்சம் ரூபாய் கார்.. வலைவிரித்த பெண்.. உஷரான கடலூர் நபர்.. பரவும் ஆடியோ!
கடலூர்: உங்களுக்கு கார் பரிசாக கிடைத்து இருக்கிறது.. அந்த காரை பெற வேண்டும் என்றால் 13 ஆயிரம் ரூபாய் கட்டுங்கள் என்று கடலூரை சேர்ந்த ஒருவருக்கு மோசடி பெண் ஒருவர் தொலைபேசியில் பேசி பணத்தை பறிக்க முயற்சிக்கும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப திருட்டு மோசடி வேலைகளும் அப்டேட் ஆகிவிட்டன.
ஏ.டி.எம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது, வங்கியில் இருந்து கால் செய்வதாக கூறி நமது வங்கி தகவல்களையும் ஓடிபி எண்ணையும் வாங்கி நமக்கே தெரியாமல் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடுவது போன்ற மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது.

நூதன முறையில் மோசடிகள்
மக்களுக்கு ஒருபக்கம் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் வெவ்வெறு வழிகளில் நூதன முறையில் மோசடியும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சிலர் இதுபோன்ற மோசடி வலையில் சிக்கி பணத்தை பறிகொடுத்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதேபோல, தற்போது உங்களுக்கு லட்சம், கோடி ரூபாய் பரிசு கிடைத்து இருக்கிறது.. கார் பரிசு விழுந்துள்ளது.. அதை வாங்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை அனுப்புங்கள் என்று கூறி தொலைபேசி மற்றும் மெசேஜ் அனுப்பி பணத்தை கறக்கும் மோசடி கும்பல்கள் அதிகரித்துள்ளன.

கார் பரிசு விழுந்திருப்பதாக மெசேஜ்
அந்த வகையில், தான் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கும் மோசடி கும்பல் ஒன்று வலை விரித்துள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியபட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. சமீபத்தில் இவரது மனைவி ஆன்லைன் இணையதளம் மூலம் பல்வேறு பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கின் மொபைல் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வந்துள்ளது. அந்த வாட்ஸ் அப் மெசேஜில், உங்களுக்கு சுமார் 13 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்திருப்பதாக அனுப்பப்பட்டிருந்தது.

ரூ. 13 ஆயிரம் முன்பணமாக செலுத்துமாறு..
இதை பார்த்த கார்த்தி வாட்ஸ் அப் மெசேஜ் வந்த எண்ணிற்கு கால் செய்து பேசியுள்ளார். அப்போது, உங்களுக்கு பரிசாக கிடைத்த காரை பெற வேண்டும் என்றால் ரூ. 13 ஆயிரம் முன்பணமாக வங்கியில் செலுத்துமாறு மறுமுனையில் பேசும் பெண் கூறியிருக்கிறார். அந்தப்பெண்ணின் பேச்சில் சந்தேகம் அடைந்த கார்த்திக் சாதுர்யமாக பேசி அழைப்பை துண்டித்துவிட்டார். இது தொடர்பான ஆடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கம்பெனியின் அக்கவுண்ட் எண்
அந்த ஆடியோவில் கார்த்திக் போன் செய்யவும் மறுமுனையில் பேசும் பெண், உங்களுக்கு கார் பரிசாக வேண்டுமா?.. அல்லது நேரடி பணமாக வேண்டுமா என்று கேட்கிறார்.. நாங்கள் கொல்கத்தாவில் இருந்து பேசுவதாகவும் கூறுகிறார். மேலும், அந்த பெண் பேசுகையில், வாட்ஸ் அப்பில் டீடெய்ல்ஸ் அனுப்பி இருக்கேன். ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அனுப்புங்கள்... கம்பெனியில் இதை வெரிபிகேஷன் செய்த பிறகு நாங்கள் உங்களுக்கு கம்பெனியின் அக்கவுண்ட் எண் கொடுப்போம்.

உஷாரான கார்த்திக்..
அதில், 13 ஆயிரம் செலுத்த வேண்டி இருக்கும் என்று கார்த்திக்கிடம் கூறுகிறார். இதற்கு கார்த்திக் நேரில் பணம் கட்டும் ஆப்ஷன் இருக்கிறதா ? என்று கேட்கிறார். ஆனால், இந்த நிறுவனம் கொல்கத்தாவில் இருப்பதாகவும் நீங்கள் கொல்கத்தா வரை வர வேண்டியிருக்கும் என்று அந்தப் பெண் கூறுகிறார். பணத்தை செலுத்தியவுடன் வண்டியை அனுப்பி வைத்துவிடுவோம்.. என்று கூறுகிறார். ஆனால், உஷாரான கார்த்திக் அழைப்பை துண்டித்து விடுகிறார்.

பொதுமக்கள் தான் விழிப்புடன் இருக்கனும்
இதுபோன்ற மோசடி கும்பல்கள் புதுப் புது வழிகளில் தங்கள் டெக்னிக்குகளை மாற்றிக்கொண்டு பலரையும் ஏமாற்ற நினைப்பதால், பொதுமக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதுபோன்று பேராசை காட்டி வலையில் விழ வைக்கும் நபர்கள் மற்றும் அழைப்புகளை நம்பி பணத்தை இழந்து விடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications