மளிகைக்கடையில் தீபாவளி பட்டாசு விற்றதால் விபத்து...சுக்குநூறான கட்டிடம் - 6 பேர் பலி, பலர் படுகாயம்
தீபாவளி பட்டாசுகளை மளிகைக்கடையில் விற்பனை செய்ததால் வெடி விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மளிகைக்கடையில் பட்டாசுகளை விற்பனை செய்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
Recommended Video
செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. செல்வகணபதிக்கு சொந்தமான ஜவுளிக்கடைக்கு பின்புறம் பட்டாசு கடையை வைத்திருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை மற்றும் குடோனில் ஏராளமான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையிலிருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்புடன் சிதறியது. அப்போது அருகே இருந்த பேக்கரியில் வைக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.
6 பேர் பலி
இந்த விபத்தில் கடைக்கு அருகே இருந்தவர்கள் தீயில் சிக்கினார். மேலும் இந்த தீ விபத்தின் போது பட்டாசுக் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் அருகருகே இருந்த ஜவுளிக்கடை, இனிப்புக்கடை, டீக்கடை, செல்போன் கடைகளில் தீ மளமளவென பரவத் தொடங்கியது. பேக்கரியில் இருந்தவர்கள் மீது பட்டாசு வெடித்து சிதறியதில் செம்பியன்,காலித்,ஷாஆலம்,ஷேக்பஷீர் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சுக்குநூறான கடைகள்
தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட கடைகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல் துறையினர்,தீயணைப்புத்துறையினர் விடிய விடிய ஈடுபட்டுள்ளனர்.15 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆறுதல்
பட்டாசுகள் வெடித்து சிதறியதால் கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்,காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
ரூ. 5 லட்சம் நிவாரணம்
கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பட்டாசு விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விபத்திற்குக் காரணம்
மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் மளிகைக் கடையில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ளதே இது போன்ற விபத்துக்கள் நிகழாத வகையில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.