"அது வீடு இல்லை, ஏன் இவ்வளவு கோபம்".. விமர்சனங்களால் நொறுங்கிய கோவை தவெக எம்எல்ஏ
கோவை: தவெக ஆட்சியமைத்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அரசு அதிகாரிகளைத் தனது வீட்டிற்கே வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அது என்னுடைய வீடே இல்லை. என் அலுவலகம் எதற்காக என் மீது இவ்வளவு கோபம் என்று கனிமொழி வேதனையுடன் விளக்கமளித்துள்ளார்.
கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "என் வீட்டிற்கு அதிகாரிகளை அழைத்து அவர்களை பிளாஸ்டிக் சேரில் அமரவைத்து நான் சோபாவில் அமர்ந்து அதிகாரம் காட்டி அவமரியாதை செய்ததாக சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்கிறார்கள். நான் கட்சி மற்றும் தளபதி பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறுகிறார்கள்.

கோவை தவெக எம்எல்ஏ சர்ச்சை
இது என்னுடைய வீடு கிடையாது. என்னுடைய அலுவலகம் தான். நான் ஜோதிடர் என்பது அனைவருக்கும் தெரியும். ஜோதிடம் செட்டப்புக்கான அலுவலகம் இது. இந்த சோபா தான் என்னுடைய இருக்கை. இங்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் அமர்ந்தது ப்யூர் லெதர். நான் சேர் தரத்திற்கு உறுதி கொடுக்கிறேன்.
என்னுடைய அலுவலகம் தனி அறையில் உள்ளது. அவர்களுக்கும் தரமான இருக்கை உள்ளது. ஜோதிடத்தில் நான் வாங்கிய சான்றிதழ்களை காட்சிப்படுத்தியுள்ளேன். இதற்காக என்னுடைய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலராக நான் நிறைய சேவைகளை செய்துள்ளேன். தளபதியால் எனக்கு அரசியலில் இறங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அது வீடு இல்லை
எனக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அமர்ந்துள்ளேன். எம்எல்ஏ ஆகி பெரிய சிம்மாசனத்தில் இருப்பதாக பலர் விமர்சிக்கிறார்கள். என் மீது இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. ஒரு பெண் வெளிப்படையாக வந்து அரசியல் செய்வதை விரும்பவில்லையா என்று தெரியவில்லை. நான் எந்த அதிகாரிகளையும் வீட்டிற்கு அழைத்து பேசுவதை ஊக்குவிக்க மாட்டேன். எனக்கு அரசியல் நாகரீகம் பற்றி தெரியும்.
என் அலுவலகத்தில் அமர வைத்துதான் பேசினேன். எனக்கான எம்எல்ஏ அலுவலகம் தயாராகி கொண்டிருக்கிறது. பெயின்டிங் வேலை முடிந்தவுடன் அங்கு சென்றுவிடுவோம். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். மக்களுக்காக மட்டும் தான் அரசியலில் வந்து, தளபதி வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தியுள்ளேன். தளபதி பெயருக்கு எப்போதும் தீங்கு விளைவிக்க மாட்டேன்.
தற்காலிக அலுவலகம்
நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.
புதிய எம்எல்ஏ அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து பொதுமக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications