குளிர் பிரதேசத்தில் கொளுத்திய வெயில்.. நிரம்பி வழியும் பிணவறைகள்! பிரான்ஸில் சோகம்!
பாரிஸ்: ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் என்பது குளிர் பிரதேசமாகும். குளிர் காலங்களில் இங்கு வெப்பநிலை 0 டிகிரி வரை குறையும். இப்படியான இடத்தில், வெயில் கொளுத்தியிருப்பது சர்வதேச அளவில் சூழலியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏன் வெயில் அதிகம்?
பூமியின் மேல் பாதியையும் கீழே இருக்கும் பாதியையும் சரியாக பிரித்து ஒரு கோடு போட்டால்.. அது நிலநடுக்கோடு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோட்டை ஒட்டியிருக்கும் பகுதியில் வெயில் மண்டையை பொளக்கும். தமிழ்நாடு இந்த கோட்டை ஒட்டிதான் இருக்கிறது. அதனால்தான் நமக்கும் மண்டை காய்கிறது. ஆனால் கோட்டிலிருந்து மேலே போக.. போக.. குளிர் நடுக்கும்.
பிரான்ஸில் சோகம்
இப்படி உச்சியில் இருக்கும் நாடுதான் பிரான்ஸ். இந்த நாட்டில் குளிர் காலம் வந்தால்.. ஆறு, ஏரி என அனைத்தும் ஐஸ் கட்டியாக உறைந்துவிடும். இப்பேர்ப்பட்ட குளிர் பிரதேசத்தில்தான் தற்போது வெயில் சுட்டெரித்திருக்கிறது. வழக்கமாக கோடை காலங்களில் வெயில் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருக்கும். ஆனால், இந்த கோடையில் வெயிலின் தாக்கம் ரொம்பவும் தீவிரமாக இருந்ததால்.. ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் வழக்கத்தை விட 1,000 கூடுதல் மரணங்கள் பிரான்ஸில் பதிவாகியுள்ளன.
உண்மை எண்ணிக்கை
இது ஆரம்பக்கட்ட தகவல் மட்டும்தான். உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 85 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். குறிப்பாக, பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் தனியாக வசித்து வந்த முதியவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீர் நிலைகளில் குளிக்கும் மக்கள்
பிரான்சின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இதனால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. வெப்பத்தைத் தணிக்கத் தடை செய்யப்பட்ட நீர்நிலைகளில் குளித்தபோது, ஜூன் 18 முதல் இதுவரை சுமார் 74 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் வெப்பம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் மருத்துவமனைகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
விஞ்ஞானிகள் வார்னிங்
பாரிஸ் போன்ற நகரங்களில் பிணவறைகள் நிரம்பி வழிவதாகவும், உடல்களை வைக்க கூடுதல் இடங்களைத் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றமே இத்தகைய தீவிர வெப்ப அலைகளுக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருந்தாலும், அதன் பாதிப்புகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications