நீச்சல் குளத்தில் ஜாலி டைவ்.. அடுத்த நொடி பறிபோன உயிர்.. ரிசார்ட்டில் அரங்கேறிய சோகம்! பகீர்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அதிரவைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ரிசார்ட் ஒன்றில் இளைஞர்கள் ஜாலியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சூழலில், ஒரே நொடியில் மிக மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இதில் ஸ்ரேனிக் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
பொதுவாக ஒருவருக்கு எப்போது சாவு வரும் என்றே தெரியாது. நல்ல நிலையில் இருக்கும் ஒருவருக்குக் கூட யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் மரணம் வந்துவிடும். அப்படியொரு அதிர்ச்சி சம்பவம்தான் இப்போது அரங்கேறியுள்ளது. அதாவது மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டில், 25 வயது இளைஞர் ஒருவர் ஆழமற்ற நீச்சல் குளத்தில் குதித்துள்ளார். இதனால் அவரது தலை நீச்சல் குளத்தின் தரையில் பட்டதால் அவர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

என்ன நடந்தது!
இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூன் 20ம் தேதி மால்வான் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியான இளைஞர் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேனிக் மிலிந்த் தாகாலே என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸ்ரேனிக் மிலிந்த் தாகாலே தனது நண்பர்கள் ஒன்பது பேருடன் மால்வான் பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி அவர்கள் விடுமுறையைக் கழித்துள்ளனர்.
சம்பவத்தன்று மதியம், நண்பர்களில் சிலர் தங்களது அறைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில், மற்றவர்கள் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரேனிக் அங்கு 10 அடி உயரத்தில் இருந்து நீச்சல் குளத்திற்குள் குதித்துள்ளார். ஸ்ரேனிக் குதித்த நீச்சல் குளத்தின் அந்தப் பகுதி சிறுவர்களுக்கானது. அதன் ஆழம் வெறும் நான்கு அடிகள் மட்டுமே இருந்தது.
தலைகீழாகக் குதித்தார்
ஆழம் குறைவாக இருப்பதைக் கவனிக்காமல் ஸ்ரேனிக் மேலிருந்து தலைகீழாகக் குதித்தபோது, அவரது தலை குளத்தின் அடிப்பகுதியில் மிகப் பலமாக மோதியுள்ளது. இதனால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த ஸ்ரேனிக்கின் தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அன்றைய தினம் இரவே மால்வான் பகுதிக்கு விரைந்து வந்தனர்.
விசாரணை
போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ஸ்ரேனிக் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்த பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான், அவர் நீச்சல் குளத்தில் குதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஜாலியாக அனைவரும் இருக்கும் ஒரு நிகழ்விலும் கூட ஒரே நொடியில் சோகம் எப்படி ஏற்படும் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
கவனம்
ஆழமற்ற நீச்சல் குளங்களில் நாம் எந்தளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை காட்டும் ஒரு எச்சரிக்கையாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. பொதுவாக எந்தவொரு நீச்சல் குளத்திலும் குதிப்பதற்கு முன்பாக, அதன் ஆழம் எவ்வளவு என்பதை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக ஆழம் குறைந்த அல்லது புதிய நீச்சல் குளங்களில் தலைகீழாக டைவ் அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சிறிய கவனக்குறைவுகள் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்!














Click it and Unblock the Notifications