அடங்காத டிரம்ப்.. இந்தியர்களை தொடர்ந்து நாடு கடத்தும் அமெரிக்கா! இதுவரை எத்தனை பேர்? முழு டேட்டா
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 20ம் தேதி அவர் அதிபரானது முதல் இன்று வரை மொத்தம் எவ்வளவு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது பற்றிய டேட்டாவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பொறுப்பேற்றார். தேர்தல் சமயத்தில் டொனால்ட் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள். இதன்மூலம் அமெரிக்காவின் பணி அமெரிக்கர்களுக்கே வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி அமெரிக்க அதிபரானதும் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றினர். உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை தேடி தேடி கண்டுபிடித்து அவர் வெளியேற்றினார். இதில் நம் நாட்டை சேர்ந்தவர்களும் சிக்கினர்.
டிரம்ப் பதவியேற்ற முதல் மாதத்திலேயே அமெரிக்காவில் இருந்து 37,660 பேர் நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவுக்கு மொத்தம் 18 ஆயிரம் இந்தியர்களை நாடு கடத்த பட்டியல் ரெடியாகி இருப்பதாக கூறப்பட்டது. மேலும் நம் நாட்டை சேர்ந்தவர்களும் அமெரிக்காவின் போர் விமானம் மற்றும் ‛கமர்சியல்' விமானத்தில் நாடு கடத்தப்பட்டனர்.
இதுதொடர்பாக இன்று வெளியுறவுத்துறை அமைசசகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் நேற்று வரை அமெரிக்காவில் இருந்து மொத்தம் 1,563 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ‛கமர்சியல்' விமானத்தில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்'' என்றார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை டொனால்ட் டிரம்ப் நாடு கடத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. முன்னதாக டொனால்ட் டிரம்ப் 2017 முதல் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக இருந்தார். அந்த 4 ஆண்டு காலத்திலும் அவர் நம் நாட்டினரை நாடு கடத்தினார். அந்த சமயத்தில் நம்நாட்டைசேர்ந்த மொத்தம் 6,135 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதில் அதிகபட்சம் என்றால் கடந்த 2019 ம் ஆண்டில் 2,042 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். பிற ஆண்டுகளை எடுத்து கொண்டால் கடந்த 2017 ல் 1,034 பேர், 2018 ல் 1,180 பேர், 2020ம் ஆண்டில் 1,889 பேர் நாடு கடத்தப்பட்டனர். இந்த தகவலை ஏற்கனவே மத்திய வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது டிரம்ப் 2வது முறையாக அதிபராகி 6 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் 1,563 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் 2021 ஜனவரி 20 முதல் 2025 ஜனவரி 20ம் தேதி வரை அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பு வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 -2021 வரையிலான டிரம்ப் ஆட்சியை ஒப்பிடும்போது குறைந்து இருந்தது. இருவரின் ஆட்சிக்கும் 3 ஆயிரம் என்ற அளவில் குறைந்து இருந்தது. அதாவது டிரம்பை ஒப்பிடும்போது ஜோ பைடன் 3 ஆயிரம் இந்தியர்களை குறைவாக நாடு கடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications