ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலிலிருந்து பாதுகாப்பாக நாடுதிரும்பிய 141 இந்தியர்கள்! மத்திய இணையமைச்சர் வரவேற்பு
டெல்லி: இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 16 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆபரேஷன் அஜய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த திட்டத்தின் 6வது சிறப்பு விமானம் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. இதன் மூலம் 141 இந்தியர்கள், 2 நேபாளிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 16 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. பதிலுக்கு ஹமாஸ் படையும் அடிக்கடி ராக்கெட்களை வீசி தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு, ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. கடைசியாக கடந்த 17ம் தேதியன்று இந்த 5வது சிறப்பு விமானம் இஸ்ரேலிலிருந்து 286 இந்தியர்கள், 18 நேபாளிகளை ஏற்றிக்கொண்டு டெல்லி வந்து சேர்ந்தது.
இந்நிலையில் 6வது சிறப்பு விமானம் இன்று அதிகாலை 141 இந்தியர்கள் மற்றும் 2 நேபாளிகளுடன் டெல்லி வந்து சேர்ந்திருக்கிறது. டெல்லி வந்த இந்தியர்களுக்கு மத்திய இணையமைச்சர் ஃபாகன் சிங் குலஸ்தே தேசிய கொடியை கொடுத்து வரவேற்பளித்தார். இதுவரை ஆபரேஷன் அஜய் மூலம் 18 நேபாளிகள் உட்பட 1,200 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். தேவையெனில் கூடுதல் விமானங்களையும் அனுப்ப தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications