முத்தான மூன்று! 17-வது லோக்சபா பாஸ் செய்த முத்தலாக், OBC சட்ட திருத்தம், பெண்களுக்கு 33% மசோதாக்கள்!
டெல்லி: நாட்டின் 17-வது லோக்சபா கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 17-வது லோக்சபா (2019-2024) கூட்டங்களில் முத்தலாக் தடை மசோதா, ஓபிசி இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதா ஆகிய 3 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
2019-ம் ஆண்டு 17-வது லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்தது. 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

17-வது லோக்சபா கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட 3 முக்கிய மசோதாக்கள்:
முத்தலாக் மசோதா: முஸ்லிம்களில் 3 முறை தலாக் சொல்வதன் மூலம் பெண்களை கணவர்கள் விவகாரத்து செய்ய முடியும் என்பது நடைமுறையாக இருந்தது. இது சட்டவிரோதமானது; அப்படி முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களை விவகாரத்து செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா 17-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. முந்தைய 16-வது லோக்சபாவிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சித்தது. ஆனால் ராஜ்யசபாவில் மத்திய பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இம்மசோதா நிறைவேற்றப்படாமல் காலாவதியானது. இதனையடுத்து 17-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில் லோக்சபா, ராஜ்யசபாவில் இம்மசோதா நிறைவேறி சட்டமானது.
ஓபிசி இடஒதுக்கீடு திருத்த மசோதா: இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (ஓபிசி OBC) பட்டியலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே தயாரிக்க அதிகாரம் தரக் கூடிய சட்டத் திருத்த மசோதா 2021-ல் நிறைவேற்றப்பட்டது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநில சட்டசபைகளிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் மசோதா 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா முன்னர் 2010-ம் ஆண்டிலேயே ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்சபாவில் நிறைவேற்றப்படாமல் இருந்தது. மேலும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின்னரே பெண்கள் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்பதும் இம்மசோதாவின் ஒரு அம்சம். ஆகையால் 2029-ல்தான் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரும் என்பது விவாதங்களை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications