1984-ல் சீக்கியர் படுகொலை- மாஜி காங்கிரஸ் எம்பி சஜ்ஜன்குமாருக்கு 2-வது ஆயுள் தண்டனை- அதிரடி தீர்ப்பு
டெல்லி: 1984-ம் ஆண்டு டெல்லியில் இரு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் முன்னாள் எம்பியுமான சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். டெல்லியில் மற்றொரு சீக்கியர்கள் படுகொலை வழக்கில் திஹார் சிறையில் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் சஜ்ஜன்குமார். டெல்லி சீக்கியர்கள் படுகொலை வழக்கில் சஜ்ஜன்குமாருக்கு 2-வது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் மாநிலங்களின் பகுதிகளை ஒருங்கிணைந்து சீக்கியர்களுக்கான காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என 1980களில் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. பிந்தரன்வாலே தலைமையிலான இந்த ஆயுதப் போராட்டம் மத்திய அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை உருவாக்கியது.

இதனையடுத்து 1984-ம் ஆண்டு சீக்கியர் தனிநாடு கோரும் அமைப்பினர் பதுங்கி இருந்த பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் உள்ளே நுழைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் பஞ்சாப் பொற்கோவில் ரத்த வெள்ளத்தில் மிதந்தது.
பஞ்சாப் பொற்கோவில் வளாகத்திலேயே பிந்தரன்வாலே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர் தனிநாடு கோரிய ஆயுதக் குழுவினர் கொல்லப்பட்டனர். இது சீக்கியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் 1984-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரை அவரது சீக்கியர் பாதுகாவலர்களே சுட்டுப் படுகொலை செய்தனர்.
இந்திரா காந்தி அம்மையார் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். டெல்லி வீதிகளில் சீக்கியர்களை காங்கிரஸ் கட்சியினர் கொன்று குவித்தனர்; சீக்கியர் சொத்துகள் சூறையாடப்பட்டன. இதனால் சீக்கியர் இனப்படுகொலை என்ற கறையை வரலாற்றுப் பக்கங்கள் சுமந்து நிற்கின்றன.
இந்த சீக்கியர் இனப்படுகொலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இன்னமும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி சீக்கியர்கள் படுகொலை வழக்கில் ஏற்கனவே மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் டெல்லி திஹார் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் டெல்லியில் மேலும் 2 சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கிலும் சஜ்ஜன்குமார் குற்றவாளி என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உறுதி செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று சஜ்ஜன்குமாருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. டெல்லி சீக்கியர் படுகொலை வழக்கில் சஜ்ஜன்குமாருக்கு டெல்லி நீதிமன்றம் 2-வது ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications