புத்தாண்டு பரிசு.. வீட்டில் நேரம் செலவிட அசாம் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் காரணமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிவேகமாக சென்று வருகிறது. அனைத்து மாநிலங்ககளிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.
இப்படி கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் அசாம் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியடையும் செய்தியை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதி என இரண்டு நாட்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.ஏ பிரிவு அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை இந்த விடுமுறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் அவர்களது பெற்றோருடனும், வீட்டில் உள்ள பெரியவர்களுடனும் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, '' அஸ்ஸாம் அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தங்கள் பெற்றோரின் ஆசியுடன் புதிய அசாம் மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு வருகிற 6 மற்றும் 7-ம் தேதி விடுப்பு (கேஷுவல் லீவ்) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஆக மொத்தத்தில் புத்தாண்டு பரிசாக இந்த விடுமுறை அசாம் அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications