டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியவருக்கு 2 நாள் சிறை... டெல்லி நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்பவருக்கு 2 நாள் சிறை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் மோதி நகரில், நேற்று திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் வாகனத்தின் மீது ஏறி, திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

திடீரென தாக்கப்பட்டதால் கெஜ்ரிவால் நிலை குலைந்தார். இதனையடுத்து, ஆம்ஆத்மி கட்சியினர் தாக்குதல் நடத்திய நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீசார் உடனடியாக வந்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில், வாகனத்தில் ஏறி தாக்குதல் நடத்தியவர் பெயர் சுரேஷ் என தெரியவந்தது. அவரை போலீசார் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது, சுரேஷ்க்கு, 2 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இதுவரை தான் 9 முறை தாக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரான பிறகு 5 முறை தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வரலாற்றில் எந்த ஒரு முதலமைச்சருக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்ந்ததில்லை என தெரிவித்துள்ள கெஜ்ரிவால், டெல்லியில் மட்டும்தான் முதலமைச்சரின் பாதுகாப்பு, எதிர்க்கட்சியான பாஜக வசம் உள்ளதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications