உடனே வெளியேறுங்கள்.. இந்தியாவில் உளவு வேலை பார்த்த 2 பாக். உயர் கமிஷ்னர்கள்.. மத்திய அரசு அதிரடி!
டெல்லி: இந்தியாவில் உளவு வேலைகளை செய்து வந்ததாக கூறி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு உயர் கமிஷ்னர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சனை நிலவி வரும் நிலையில், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் எல்லையில் பிரச்சனை செய்ய திட்டமிட்டு வருகிறது. நேற்றுதான் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதேபோல் லடாக் எல்லையில் இந்தியா தொடர்ந்து அத்துமீறி வருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் உளவாளிகள் இருவர் அகப்பட்டு உள்ளார் .

விசா அதிகாரிகள்
இந்தியாவில் உளவு வேலைகளை செய்து வந்ததாக கூறி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு உயர் கமிஷ்னர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதன்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் உயர் கமிஷனில் இவர்கள் இருவரும் விசா பிரிவில் பணியாற்றி உள்ளனர். இவர்களின் பெயர்கள் அபீத் ஹுசைன் மற்றும் தாஹீர் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லியில் பாகிஸ்தானின் உளவு பணிகளுக்கு ரகசியமாக உதவியதாக கூறப்படுகிறது.

உளவு அமைப்பு
அதாவது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயில் இவர்கள் ரகசியமாக பணியாற்றி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் சிலருக்கு போலி விசா தயார் செய்வதை இவர்கள் பணியாக செய்து இருக்கிறார்கள். இந்தியா வரும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு விசா அளிக்கும் வேலையில் இவர்கள் ஈடுப்பட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரும்புங்கள்
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி போலீஸ் இவர்களின் செயலை கண்டுபிடித்து இன்று வளைத்து பிடித்தது. இவர்களிடம் இன்று டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியது .இதை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரையும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு திருப்பி செல்லவும், இவர்களின் விசாவை நிரந்தரமாக ரத்து செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடும் எச்சரிக்கை
இது தொடர்பாக பாகிஸ்தான் உயர் கமிஷனுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு ராஜாங்க ரீதியாக வரும் பாகிஸ்தான் அதிகாரிகள் இது போல உளவு பணிகள் செய்ய கூடாது. அப்படி உளவு பணிகளால் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் , என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications